நடிகர் எஸ்ஜே சூர்யா படுகாயம்.. ‛கில்லர்' சூட்டிங்கில் கம்பியில் விழுந்ததால் ஷாக்.. 2 கால்களிலும் அடி
சென்னை: ‛கில்லர்'திரைப்படத்தின் இயக்குநரும், நடிகருமான எஸ்ஜே சூர்யா இயக்கி நடித்து வருகிறார். இந்நிலையில் தான் இன்று பாலவாக்கத்தில் சண்டை காட்சி படமாக்கப்பட்டது. ‛ரோப்' பயன்படுத்தி எஸ்ஜே சூர்யா நடித்தபோது கம்பியில் விழுந்து காயமடைந்ததால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் இருப்பவர் எஸ்ஜே சூர்யா. நடிகர் அஜித் குமாரை வைத்து ‛வாலி', நடிகர் விஜயை வைத்து ‛குஷி' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி வெற்றி இயக்குநராக வலம் வந்தார்.
இவர் கடைசியாக 2015ம் ஆண்டில் ‛இசை' எனும் திரைப்படத்தை இயக்கி நடித்தார். சமீபகாலமாக அவர் திரைப்படங்களை இயக்காமல் இருந்தார். நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன.

இந்நிலையில் தான் 10 ஆண்டுகளுக்கு பிறகு எஸ்ஜே சூர்யா ‛கில்லர்' என்ற திரைப்படத்தை இயக்கி அவரே நடித்து வருகிறார். இதனால் இந்த திரைப்படம் அவரது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கிறார். ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்த திரைப்படத்தின் 3வது கட்ட படப்பிடிப்பு சென்னை பாலவாக்கத்தில் இன்று நடந்தது. அப்போது சண்டை காட்சி படமாக்கப்பட்டது. ‛ரோப்' பயன்படுத்தி எஸ்ஜே சூர்யா நடித்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கம்பியில் மோதினார். இதில் அவரது 2 கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
ரத்தம் சொட்டிய நிலையில் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காலில் தையல் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் 15 நாட்கள் வரை அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.
இதனால் ‛கில்லர்' படப்பிடிப்பு 15 நாட்கள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பில் எஸ்ஜே சூர்யா காயமடைந்த சம்பவம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.












Click it and Unblock the Notifications