ஸ்ரீகாந்த் போதை கேஸ்.. மருத்துவ சான்று இருந்தும்? நடிகர் கிருஷ்ணா கைது ஏன்? காரணமான அந்த ஆதாரம்?
சென்னை: போதைப் பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்படுவதற்கு முக்கியமான சில ஆதாரங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட கிருஷ்ணாவை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து கிருஷ்ணா கைது
போதைப் பொருள் வழக்கில் ஸ்ரீகாந்தைத் தொடர்ந்து கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப் பொருள் வழக்கில் தேடப்பட்டு வந்த நடிகர் கிருஷ்ணாவை தனிப்படை போலீசார் நேற்று பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் உரிய ஆதாரங்கள் கிடைத்ததால் கிருஷ்ணா மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெசன்ட் நகர் வீட்டில் சோதனை
சென்னை பெசன்ட் நகரில் உள்ள நடிகர் கிருஷ்ணா வீட்டில் இரண்டு மணி நேரமாக போலீசார் சோதனை மேற்கொண்டனர். இரைப்பை அலர்ஜியால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் வாக்குமூலம் அளித்த நிலையில், அவர் பயன்படுத்தும் மருந்துகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

நடிகர் கிருஷ்ணாவிடம் நேற்று விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. போதைப் பொருள் வழக்கில் நேரில் ஆஜரான அவரிடம் 14 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தினர். மருத்துவப் பரிசோதனையில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நபர்களுடனான அவரது தொலைபேசி உரையாடல்கள் மற்றும் தொடர்புகள் குறித்து போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்த ஆதாரங்கள் அவருக்கு எதிராக இருந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது, சில தொலைபேசி உரையாடல்கள், குறுஞ்செய்தி ஆதாரங்கள் கிருஷ்ணாவிற்கு எதிராக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஆதாரங்களை வைத்தே அவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்று கூறி அதற்கான மருத்துவ ஆதாரங்கள் சிலவற்றை கொடுத்தாலும், அவருக்கு எதிராக வேறு சில ஆதாரங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
கிருஷ்ணா அளித்த வாக்குமூலம்
முன்னதாக கிருஷ்ணா அளித்த வாக்குமூலத்தில், கடந்த ஆண்டு அவருக்கு ஆஞ்சியோ செய்ததற்கான சான்றிதழ் இருந்தது. அதேபோல், அவருக்கு இதயப் படபடப்பு, வாயுத் தொல்லை இருப்பதும் மருத்துவ அறிக்கையில் தெரியவந்தது. இதனால் தன்னால் உயர்ரக போதைப் பொருளை பயன்படுத்த முடியாது என்று அவர் கூறியிருந்தார்.
அவர் மேலும் கூறுகையில், "இதயப் படபடப்பு உள்ளது. இப்படியிருக்கும்போது நான் எப்படி போதைப் பொருளை பயன்படுத்த முடியும்? அதேபோல் போதைப் பொருள் கும்பலுக்கும் எனக்கும் தொடர்பில்லை.
நடிகர் ஸ்ரீகாந்தும் நானும் நெருங்கிய நண்பர்கள். பார்ட்டிகளில் நாங்கள் ஒன்றாகவே கலந்து கொள்வோம். ஆனால் நான் போதைப் பொருள் பயன்படுத்தினேன் என வெளியான தகவலில் உண்மையில்லை. என்னால் அது போன்ற போதை வஸ்துகளை பயன்படுத்த முடியாது. ஏனென்றால் எனது உடல்நிலை அப்படி உள்ளது. எனக்கு வாயு கோளாறு உள்ளது. இரைப்பை அழற்சி உள்ளது," என்று கூறியிருந்தார்.
இவர் போதைப் பொருளை பயன்படுத்தாமல் யாருக்காவது விற்றிருப்பாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த விசாரணையின் முடிவிலேயே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
போதைப் பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளது திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications