பிரபல நடிகர் சுரேஷ் எங்கே? வீட்டில் இல்லயாமே.. வக்கீல் விளக்கம் தந்தும் ஏற்காத போலீஸ்.. பரபரத்த பாஜக
சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர் கே சுரேஷ் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
ஆருத்ரா விவகாரம் விஸ்வரூபமெடுத்து வருகிறது.. சென்னை அமைந்தகரையில் தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம்.
ஆருத்ரா நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, விருதுநகர், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் அரியலூர் உள்ளிட்ட 57 இடங்களில் ஆருத்ரா நிறுவனத்திற்கு தொடர்புடையவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

நடிகர் சுரேஷ்: ஆருத்ரா நிறுவனத்தில் 1,09,255 பொதுமக்கள் 2,438 கோடி ரூபாய் முதலீடுகள் செய்தது தெரியவந்தது. அதாவது, மாதத்திற்கு 25 முதல் 30% வட்டி தருவதாக சொல்லி, 2,400 கோடி வரை முதலீடு பெற்றுள்ளது... செப்டம்பர் 2020 முதல் மே 2022 வரை இந்த நிறுவனத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் முதலீடு செய்துள்ளனர்.
ஆனால், சொன்னபடி வட்டி பணத்தையும் வழங்காமல் முதலீடு பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றியுள்ளது.. மேலும் ஆருத்ரா கோல்ட் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களின் உரிமையாளர்கள் 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர் போலீஸார்.
இதில், பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார், பட்டாபிராம், மைக்கேல்ராஜ், ஹரீஷ், பேச்சிமுத்துராஜ் என்ற ரபீக், ஐயப்பன், ரூசோ, நாகராஜ், மாலதி உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தேடி வருவதுடன், அவர்கள் குறித்து ஆதாரங்களுடன் தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் போலீஸார் அறிவித்துள்ளனர்.. இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வரும் நிலையில் 10 மாதங்களாக தலைமறைவாக இருந்த ஆருத்ரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மைக்கேல்ராஜ் என்பவர் சமீபத்தில் துபாய் ஏர்போர்ட்டில் கைது செய்யப்பட்டார்..

சுரேஷ் தலைமறைவு: அதேபோல ரூசோ என்பவரும் கைதான நிலையில், அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான், பிரபல நடிகரும், பைனான்சியரும், தமிழக பாஜகவின் கலைப்பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்கே சுரேஷூக்கும் தொடர்பு உள்ளது தெரியவந்தது. அதாவது, டெல்லி சோர்ஸ் மூலம், இந்த வழக்கை வலுவிழக்க செய்ய சுரேஷுக்கு ரூசோ 12 கோடி கொடுத்திருக்கிறார்.. ஆனால், பொருளாதார குற்றப்பிரிவில் உள்ள சில அதிகாரிகள் இதற்கு மறுத்ததால், அந்த திட்டத்தை அப்படியே நிறுத்திவைத்துள்ளார்.. அத்துடன், தான் கைநீட்டி வாங்கிய பணத்துடன் சுரேஷும், தலைமறைவானதாக கூறப்படுகிறது... எனவே, சுரேஷை விசாரிக்க போலீசார் திட்டமிட்டனர்..
ஆனால், அவர் வெளிநாடு தப்பி சென்றதாக தகவல் வெளியானது.. இப்படிப்பட்ட சூழலில்தான், விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அதற்கு பிறகு அவரை கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு திட்டமிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்கே சுரேஷ் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.. விசாரணை வளையத்துக்குள் ஆர்கே சுரேஷ் கொண்டுவரப்பட்டால்தான், இதற்கு பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என்ற விவரமெல்லாம் தெரியவரும் என்கிறார்கள்..

சுரேஷூக்கு சம்மன்: முன்னதாக, ஆர்.கே. சுரேஷின் வழக்கறிஞர் சமர்ப்பித்த விளக்கங்களை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள், ஏற்க மறுத்துள்ளனர்.. அதற்கு பிறகுதான், சுரேஷை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.. சுரேஷின் வீட்டிற்கு போலீசார் விசாரணைக்காக சென்ற போது அவர் வீட்டில் இல்லாததால், போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். இதனை தொடர்ந்து, ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க, பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசிஅம்மாள் தலைமையில் மாவட்ட அளவில் 30 காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆருத்ரா நிதி நிறுவன வசதி வழக்கில் நடிகர் ஆர் கே சுரேஷ் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உத்தரவிட்டனர். ஏற்கனவே, பாஜக விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக உள்ள ஹரிஷை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்த நிலையில், அந்த நிறுவனத்தின் மற்றொரு இயக்குனரான மாலதி என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இப்போது தமிழக பாஜகவின் கலைப்பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்கே சுரேஷூக்கு சம்மன் அனுப்பி உள்ளதால், பாஜகவுக்குள் பரபரப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications