விஜய் பெயரை சொல்லாமல் வாழ்த்து சொன்ன சூர்யா! “நண்பரின் புது வரவு நல்வரவாகட்டும்”.. அதிர்ந்த அரங்கம்!
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி, அதன் முதல் மாநாடு இன்று நடைபெறும் நிலையில், 'கங்குவா' இசை வெளியீட்டு விழா மேடையில், விஜய்யின் பெயரைக் குறிப்பிடாமல் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா.
சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் 'கங்குவா' திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கியிருக்கும் இந்தப் படம், சூர்யாவுக்கு நீண்ட நாட்கள் கழித்து வெளியாகும் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (அக்டோபர் 26) இரவு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.

சூர்யா பேச்சு: கங்குவா இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் பற்றிப் பேசிய சூர்யா, விஜய்யின் தவெக மாநாடு பற்றியும் பேசியுள்ளார். சூர்யா பேசுகையில் "என்னுடைய காலேஜ் ஜூனியர் ஒருவர் இருக்கிறார். 'பாஸ்' என்று தான் நான் அவரைக் கூப்பிடுவேன். அவர் என்னை வைத்து இரண்டு படங்கள் எடுத்திருக்கிறார். இப்போது அவர் துணை முதலமைச்சராக ஆகியிருக்கிறார். துணை முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். எப்போதும் அணுகக்கூடியவராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின்.
நண்பரின் புதிய பயணம்: என்னுடைய இன்னொரு நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் புதிய பயணத்திற்காக புதிய பாதை போட்டிருக்கிறார். அவருடைய வரவும் நல்வரவாக இருக்கட்டும்" என்று தெரிவித்தார் சூர்யா. விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று நடைபெறும் நிலையில் விஜய்யை குறிப்பிட்டே சூர்யா அவ்வாறு சொன்னதாகத் தெரிகிறது. சூர்யாவின் இந்தப் பேச்சுக்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
போஸ் வெங்கட்: முன்னதாக கங்குவா இசை வெளியீட்டு விழாவில் நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட் பேசுகையில், "ஒரு சூப்பர் ஸ்டார் ரசிகர்களை வழிநடத்த வேண்டும். உங்களை மாதிரி வழிநடத்த வேண்டும். உதவி, தர்மம் செய்ய இப்போதே சொல்லிக்கொடுக்க வேண்டும். அனைவருக்கும் படிப்பை கொடுக்க வேண்டும். அதற்கு பிறகுதான் அரசியலுக்கு வரவேண்டும். ஒரு தலைவன் நடிகனாக, எழுத்தாளனாக, டாக்டராக இருக்கலாம். ஆனால் தலைவன் முகம் ரசிகர்களை முட்டாளாக வைத்திருப்பதைவிட அறிவாளியாக வைத்திருக்க வேண்டும். ரசிகனை படிக்க வைக்க வேண்டும். அவனுக்கு அறிவை வளர்க்கணும் பிறகுதான் அரசியலுக்கு வர வேண்டும்.
அப்படி பார்த்தால் நீங்கள் அரசியலுக்கு வரணும். கமலுக்கு பிறகு நுணுக்கமான நடிகன் சூர்யாதான். நிறைய திருப்திகரமான படங்களை கொடுத்துவிட்ட பிறகு அரசியலுக்கு வரவேண்டும்" என்று பேசினார். போஸ் வெங்கட் பேசியதை சீரியசான முகபாவத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார் சூர்யா.
பெயர் சொல்லாமல்: நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடக்கவிருக்கும் சூழலில் சூர்யா பட ஆடியோ லாஞ்ச்சில் போஸ் வெங்கட்டின் இந்தப் பேச்சு சலசலப்புகளை ஏற்படுத்தியது. அதற்கு தனது பேச்சின் இறுதியில், விஜய் பெயரை குறிப்பிடாமல் வாழ்த்து சொல்லி, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சூர்யா. விஜய், சூர்யா இருவரும், "நேருக்கு நேர்", "ஃப்ரெண்ட்ஸ்" ஆகிய 2 படங்களில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகம்: நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ள விஜய் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்தான் நமது இலக்கு என தனது தொண்டர்களுக்கு தெரிவித்துள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று (அக்டோபர் 27) நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி சாலையில் பிரம்மாண்டமாக இன்று மாலை 4 மணிக்கு மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ள நிலையில் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
தவெக மாநாடு: இந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய், தனது கட்சியின் கொள்கைகள், திட்டங்கள் குறித்து தொண்டர்கள் மத்தியில் உரையாற்ற இருக்கிறார். கட்சி தொடங்கப்பட்ட பின்னர் விஜய்யின் முதல் மாநாடு மற்றும் முதல் அரசியல் உரை என்பதால், அனைவரும் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பல்வேறு சினிமா பிரபலங்களும், மாற்றுக் கட்சியினரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications