அப்பாவுக்கு தெரியாமல் அம்மா வாங்கிய ரூ 25 ஆயிரம் கடனை அடைக்கவே நடிக்க வந்தேன்! சூர்யா ஓபன்டாக்
சென்னை: எனது அம்மாவின் ரூ 25 ஆயிரம் கடனை அடைப்பதற்காகவே நான் முதலில் நடிக்க வந்தேன் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். மேலும் தனது தந்தை சிவக்குமாரும் சில காலம் வேலை இல்லாமல் இருந்து வந்ததாகவும் சூர்யா தெரிவித்திருந்தார்.
நடிகர் சிவக்குமாருக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அவர்களில் சூர்யாவும் கார்த்தியும் நடிகர்களாவர். சூர்யா தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அவருடை மனைவி ஜோதிகா. அது போல் சிவக்குமாருக்கு பிருந்தா என்ற மகள் உள்ளார்.

அவர் பாடகி! ஜோதிகா நடித்த படத்தில் கூட அவர் பாடலை பாடியுள்ளார். முழுக்க முழுக்க இசையிலேயே அவர் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். நடிகர் சிவக்குமார் கந்தன் கருணை உள்ளிட்ட படங்களில் முருகன் வேடத்தில் நடித்திருந்ததை பார்த்திருக்கிறோம்.
அவர் இன்றளவும் யோகா, உடற்பயிற்சிகளை செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதால் அவரை மார்கண்டேயன் என்றும் ரசிகர்கள் அழைப்பார்கள். இந்த நிலையில் அவருடைய மூத்த மகன் சூர்யா, 1997ஆம் ஆண்டு நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் தற்போது கங்குவா படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் ரஜினியின் வேட்டையன் படமும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டதால் தனது பட ரிலீஸை நவம்பர் 14ஆம் தேதிக்கு சூர்யா தள்ளி வைத்தார். இந்த நிலையில் அண்மையில் சூர்யா ஒரு பேட்டி அளித்திருந்தார்.
அதில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். நான் நடிக்க வந்ததே எனது அப்பாவுக்கு தெரியாமல் அம்மா வாங்கிய ரூ 25 ஆயிரம் கடனை அடைக்கத்தான். நடிப்பதற்கு முன்பு பனியன் நிறுவனம் ஒன்றில் முதலில் 15 நாட்களுக்கு ரூ 750 ஊதியத்துடன் பயிற்சி பெற்றேன். பிறகு ரூ 8 ஆயிரம் வரை ஊதியம் பெற்றேன்.
மேலும் பனியன் நிறுவனத்தில் பெற்ற அனுபவத்தின் மூலம் தனது தந்தையின் முதலீட்டை பயன்படுத்தி சொந்தமாக நிறுவனம் தொடங்கும் திட்டத்தில் இருந்தேன். நடிக்கும் எண்ணம் என் கற்பனையில் கூட இருந்தது இல்லை. ஆனால் என் அப்பாவுக்கு தெரியாமல் ரூ 25 ஆயிரம் கடனை என் அம்மா வாங்கியதால் அனைத்தும் மாறியது. எங்களின் வங்கி கணக்கில் ஒன்றரை லட்சம் கூட இல்லை என அம்மா குறிப்பிட்டார்.
நடிப்பதற்கு யார் எந்த சம்பளம் தருகிறார்களோ அதைத்தான் என் தந்தை பெற்றார். மற்றபடி யாரையும் இவ்வளவு வேண்டும், அவ்வளவு வேண்டும் நிர்பந்தித்ததில்லை. அதே நேரம் அப்பா 10 மாதங்கள் வேலை இல்லாமல் இருந்தார். ஒரு நடிகரின் மகனாக எனக்கு பல வாய்ப்புகள் வந்தன.
மணிரத்னம் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வந்த தொடர் அழைப்புகள் அனைத்தையும் மாற்றியது. அம்மாவின் கடனை அடைத்தேன். எனது சினிமா பயணம் தொடங்கியது. நான் சூர்யாவானேன் என சூர்யா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சில்லுனு ஒரு காதல்.
இந்த படத்தில் ஜோதிகா, பூமிகா ஆகியோர் என்னுடன் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடிக்கலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஜோதிகா இந்த படத்தில் நான் கண்டிப்பாக நடிப்பேன் என சொல்லிவிட்டார். எனவே அவர் வேறு யாருடனும் நடிக்கக் கூடாது என்பதற்காக நான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என சூர்யா நகைச்சுவையாக தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications