நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அண்ணாமலை! பாஜகவை அழிக்க வந்த ஸ்லீப்பர் செல்! -எஸ்.வி.சேகர்
சென்னை: நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அண்ணாமலை என்றும் பாஜகவை அழிக்க வந்த ஸ்லீப்பர் செல் எனவும் நடிகரும், வலதுசாரி ஆதரவாளருமான எஸ்.வி.சேகர் விமர்சித்துள்ளார்.
மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று மோடி பிரதமராவது உறுதி என்றும் ஆனால் தமிழகத்தில் அண்ணாமலையின் பங்கு அதில் எதுவும் இருக்காது எனவும் சாடியுள்ளார். எங்கோ யாரிடமோ பணத்தை பெற்றுக் கொண்டு தமிழ்நாட்டில் பாஜகவை அழிக்கும் வேலையில் அண்ணாமலை ஈடுபட்டிருப்பதாக பரபரப்பு குற்றஞ்சாட்டினார்.

வட்டச் செயலாளர் வண்டுமுருகனை போன்றவர் அண்ணாமலை என்றும் நாடாளுமன்றத் தேர்தல் வந்த பிறகு தான் அண்ணாமலை என்ன செய்திருக்கிறார் என்பது தெரிய வரும் எனவும் எஸ்.வி.சேகர் கலாய்த்தார். பாஜகவில் நிர்வாகிகள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி எல்லோரையும் கட்சியை விட்டு வெளியேற்றும் பணியில் அண்ணாமலை ஈடுபட்டுள்ளதாக எஸ்.வி.சேகர் சாடியுள்ளார்.
தமிழக பாஜக தலைவராக வானதி சீனிவாசன் கூட வரலாம் என ஆருடம் கூறிய எஸ்.வி.சேகர், தனக்கு பாஜக மாநில தலைவர் பதவி மீது எந்த ஆசையும் கிடையாது எனக் கூறியிருக்கிறார். ஒடிசா ரயில் விபத்தை பொறுத்தவரை எதிர்பாராத துயர நிகழ்வு என்றும் இதற்காக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை குறை கூறக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.
தனக்குத் தெரிந்து அஷ்வினி வைஷ்ணவ் ஒரு நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும் நெருக்கடியான தருணங்களை துணிச்சலாக எதிர்கொண்டு இயல்பு நிலையை கொண்டு வந்தவர் எனவும் எஸ்.வி.சேகர் புகழாரம் சூட்டினார். அதேபோல் ஒடிசாவிலிருந்து தமிழர்களை மீட்பதற்காக அமைச்சர் உதயநிதி சென்றது பாராட்ட வேண்டிய ஒன்று எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications