மருத்துவமனையில் நடிகர் டி.ராஜேந்தர்- ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூருக்கு அழைத்து செல்ல முடிவு?
சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் டி.ராஜேந்தரை ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் திரைத்துறையில் தனித்த அடையாளமாக திகழ்பவர் டி.ராஜேந்தர். இயக்கம், நடிப்பு, இசை என அத்தனை துறைகளிலும் முத்திரை பதித்தவர் டி.ராஜேந்தர். இவரது மகன் சிம்பு முன்னணி நாயகர்களில் ஒருவராக திகழ்கிறார்.
இந்த நிலையில் டி.ராஜேந்தர் உடல்நிலை சில நாட்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் கடந்த 19-ந் தேதி அனுமதிக்கப்பட்டார் டி.ராஜேந்தர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இதயத்துக்கு செல்லக் கூடிய ரத்த குழாய், வால்வுகளில் அடைப்பு இருப்பதாக கண்டறிந்தனர். அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டும் வருகிறது.
நடிகர் டி ராஜேந்தர் திடீர் உடல்நலக் குறைவால் பாதிப்பு.. மருத்துவமனையில் அனுமதி.. தவிப்பில் ரசிகர்கள்
இதனிடையே டி.ராஜேந்தரை ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சிங்கப்பூர் அழைத்துச் செல்ல அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
டி.ராஜேந்தர் உடல்நிலை தொடர்பாக அவரது மகன் நடிகர் சிம்பு இன்று அறிக்கை வெளியிடக் கூடும் எனவும் கூறப்படுகிறது.