3 நாள் சண்டை முடிஞ்சது.. ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்கும் விஜய்-திருமா! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் குறித்து காரசாரமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன். இந்த நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் ஒரு நிகழ்ச்சியில் விஜய்யும், திருமாவளவனும் ஒரே மேடையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
தவெக எனும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று முன் தினம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி-சாலை பகுதியில் கோலாகலமாகவும் கொண்டாட்டமாகவும் நடந்தேறி இருக்கிறது. இந்த மாநாட்டில் சுமார் 3 லட்சம் பேர் வரை கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், பெரியாரின் கடவுள் மறுப்பை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதே நேரத்தில் பகுத்தறிவு பெண்கள் முன்னேற்றம் சமூக நீதி ஆகியவை தங்களது கட்சியின் கொள்கைகளாக இருக்கும் என விஜய் கூறியிருந்தார்.
இது பல விமர்சங்களை பெற்றுள்ளது. பகுத்தறிவுக் கொள்கையில் முதலாவது கடவுள் மறுப்பு எனும் பெரியாரிய ஆதரவாளர்கள் விஜய் குழப்ப மனநிலையில் இருப்பதாக விமர்சிக்கின்றனர். அதே நேரத்தில் திராவிடமும், தமிழ் தேசியமும் எனது இரு கண்கள் என விஜய் கூறியிருந்தார். இதுகுறித்து பேசிய நாம் தமிழர் கட்சி சீமான், விஜயின் கருத்து கருவாட்டு சாம்பார் போல் உள்ளது என கூறினார். இதேபோல் பாஜக, திமுக, விசிகவினரும் விஜயை விமர்சித்து வருகின்றனர்.
ஒருபடி மேலே போய் விஜயை விமர்சித்து அறிக்கை விட்டதோடு, திருவண்ணாமலையில் நீண்ட பேட்டியையும் கொடுத்திருந்தார் திருமா. மேலும், காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருக்கிற 28 கட்சிகளும் பாசிஸ்டுகளை எதிர்க்கிறோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இந்தியாவை பொறுத்தவரையில் பாசிச எதிர்ப்பு என்றாலே பாஜக எதிர்ப்பு தான் சங்பரிவார் எதிர்ப்பு தான். ஆக 'நீங்களும் பாசிஸ்டுகள் தான் என்று சொல்லக்கூடாது' என நான் சொல்ல முடியாது அது அவருடைய கருத்து. அப்படி என்றால் காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் என அனைவரையுமே பாசிஸ்டுகள் என கேலி செய்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது என கூறியிருந்தார்.
அதே நேரத்தில் விஜய்யின் உரையில் இருந்த தெளிவற்ற விஷயங்களை சுட்டிக் காட்ட வேண்டிய இருந்ததால் சுட்டிக் காட்டினேன். விஜய் மீது எனக்கு எந்த தனிப்பட்ட வன்மமும் இல்லை என்றும் விசிக தலைவர் திருமாவளவன் சுட்டிக் காட்டியிருந்தார். இந்த நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் ஒரு நிகழ்ச்சியில் விஜயும், திருமாவளவனும் ஒரே மேடையில் பங்கேற்க இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
வரும் டிசம்பர் 6ஆம் தேதி சென்னையில் பிரபல இதழ் ஒன்றின் சார்பாக அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் பங்கேற்க தவெக தலைவர் விஜய், விசிக தலைவர் திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புத்தகத்தை திருமாவளவன் வெளியிட விஜய் பெற்றுக் கொள்வார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசியலில் விஜய் குறித்து காரசாரமான விமர்சனங்களை முன்வைத்து வரும் திருமாவளவன் தற்போது விஜய்யுடன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அரசியலில் ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications