விஜய் ஆண்டனி வீட்டிற்கு வந்த தடய அறிவியல் துறை.. தனியார் பள்ளி முதல்வரிடம் விசாரித்த போலீஸ்!
சென்னை: நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது வீட்டில் தடய அறிவியல் துறையினர் சோதனை நடத்தினர். அதேபோல் காவல்துறையினரும் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் இன்று அதிகாலை தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டார். அவரை ஆழ்வார்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்த்த போது, மீரா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து மீராவின் தற்கொலை குறித்து சென்னை தேனாம்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் நேரில் வந்து தீவிர விசாரணை நடத்தினர். மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில் அதுபற்றி விசாரணையை தேனாம்பேட்டை போலீசார் தொடங்கி உள்ளனர்.
இதனிடையே விஜய் ஆண்டனி இல்லத்திற்கு தடய அறிவியல் துறையினர் நேரில் வந்து சோதனை நடத்தினர். தற்கொலை நடந்ததாக சொல்லப்படும் இடத்தில் சென்று ஆதாரங்கள் ஏதும் உள்ளதா என்பதை சோதித்தனர். அத்துடன் தற்கொலை எப்படி நடந்தது உள்பட பல்வேறு விவரங்களை சேகரித்தனர்.
இதேபோல் தேனாம்பேட்டை காவல்துறையினரும் விஜய் ஆண்டனி இல்லத்திற்கு வந்து குடும்பத்தினரிடம் தற்கொலை எப்படி நடந்தது, மனரீதியாக ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து விசாரித்தனர். அதேபோல் அவர் படித்த தனியார் பள்ளியின் முதல்வர் மற்றும் மாணவிகளும் இன்று துக்கம் விசாரிப்பதற்காக வீட்டிற்கு வந்தனர்.
அவர்களிடமும் போலீசார் மாணவி பள்ளியில் எப்படி படிப்பார், பள்ளியில் ஏதேனும் பிரச்சனையா, சக மாணவிகளிடம் தற்கொலை குறித்து ஏதேனும் சொன்னாரா, தன்னுடைய பிரச்சனைகள் குறித்து யாரிடமாவது தெரிவித்தாரா என்பது குறித்தும் விசாரித்தனர். அதற்கு மாணவிகளும் ஆசிரியர்களும் பதில் அளித்தனர். விசாரணையின் முடிவில் முழு விவரம் தெரியவரும் என்று தேனாம்பேட்டை போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications