"அடுத்தடுத்து நல்ல, புதிய தலைவர்கள்" அரசியல் வருகையை சூசகமாக கூறினாரா விஜய்? ரசிகர்கள் துள்ளல்
சென்னை: நாளைய வாக்காளர்களாகிய நீங்கள் பல தலைவர்களை பார்க்க போகிறார்கள் என நடிகர் விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில் பேசினார்.
தமிழகத்தில் நடந்த 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடத்த விஜய் முடிவு செய்திருந்தார். இதனால் அவர் 234 தொகுதிகளிலும் முதல் 3 மதிப்பெண்களை பிடித்த மாணவ, மாணவிகளையும் அவர்களது பெற்றோரையும் அழைத்து இன்று சந்திப்பு நடத்தி வருகிறார்.
அப்போது ரசிகர்களின் கூட்டத்தில் நீந்தி ஒருவழியாக விழா மேடைக்கு வந்தார் விஜய். பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். அப்போது அவர் விழா மேடைக்கு சென்று பேசினார்.

அப்போது என் நெஞ்சில் குடியிருக்கும் மாணவ மணவிகளே என தொடங்கினார். இதையடுத்து அவர் கூறுகையில் நான் சராசரி மாணவன்தான். இலவசமாக கிடைப்பது அறிவுரைதான். ஆனாலும் நான் விரைவில் பேச்சை முடித்துவிடுகிறேன். உங்களுக்கு போர் அடித்தால் சொல்லுங்கள் நான் நிறுத்தி விடுகிறேன்.
நீங்கள் இத்தனை நாட்கள் பெற்றோர் கண்காணிப்பில் இருந்தீர்கள். தற்போது புது இடம் , புது கல்லூரிக்கு செல்கிறீர்கள், அங்கு புது மனிதர்களை பார்ப்பீர்கள். எனவே எங்கு சென்றாலும் சுயஒழுக்கத்தை கடைபிடியுங்கள். ஒழுக்கம் போனால் அனைத்தும் போன மாதிரி என்றார். மேலும் அடுத்ததாக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொல்லிய விஷயத்தை மாணவர்களிடம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து விஜய் பேசுகையில் நாளைய வாக்காளர்களாகிய நீங்கள் நல்ல தலைவர்களை ஓட்டு போட்டு தேர்வு செய்ய வேண்டும். நீங்கள்தான் வரக் கூடிய நாட்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆவர். இனி அடுத்தடுத்த தலைவர்களை பார்ப்பீர்கள். அடுத்த தேர்தல்களில் நீங்கள் வாக்களிப்பீர்கள். அப்போது காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட வேண்டாம் என உங்கள் பெற்றோரிடம் சொல்லுங்கள். நீங்கள் சொன்னால் அவர்கள் கேட்பார்கள்.
உங்கள் கையை வைத்தே உங்கள் கண்களை குத்தும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. தேர்வில் வெற்றி பெற்ற நீங்கள் தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களையும் சந்தித்து அவர்களுக்கு ஆறுதலையும் தைரியத்தையும் சொல்ல வேண்டும். தோல்வி அடைந்த மாணவர்கள் வெற்றி பெற எனது வாழ்த்துகள். தோல்வியால் மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். யார் எதை சொன்னாலும் கேட்க வேண்டாம். உங்கள் மனசாட்சிக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்யுங்கள் இவ்வாறு விஜய் பேசினார்.
விஜய் பேசிய இந்த பேச்சில் அவர் இனி வருங்காலத்தில் நிறைய தலைவர்கள் உருவெடுப்பார்கள் என கூறியிருந்தார். எனவே அவர் 2026 சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காசு வாங்கிக் கொண்டு வாக்களிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். உங்கள் கையால் உங்கள் கண்களை குத்தும் நிலை என்று கூறி தற்போதைய அரசியல் கட்சிகளை விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications