‛‛விரைவில் சந்திப்போம்’’.. 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்தோடு குட்நியூஸ் கூறிய நடிகர் விஜய்
சென்னை: சமீபத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ரிசல்ட் வெளியாகியிருந்த நிலையில், இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ரிசல்ட் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இரண்டு தேர்விலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ரிசல்ட் வெளியாகியிருந்தது. அதன்படி 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த ஆண்டு 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 7,60,606 மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வை எழுதியிருந்தனர். இதில் 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது மாணவர்கள் 3,25,305 பேரும், மாணவிகள் 3,93,890 பேரும் பொதுத் தேர்வை எழுதியிருந்தனர். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்வு எழுதினார். இதில் மாணவர்கள் 92.37% பேரும், மாணவிகள் 96.44% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மூன்றாம் பாலின மாணவரும் தேர்ச்சி அடைந்துள்ளார். தமிழகத்தில் 2,478 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
அதேபோல் இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த தேர்வில் மொத்தம் 8,94,264 மாணவ/மாணவியர் பங்கேற்றிருந்தனர்.இவர்களில் 8,18,743 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 91.55 ஆகும். தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் முதலிடத்திலும், சிவகங்கை இரண்டாம் இடத்திலும் ராமநாதபுரம் மூன்றாம் இடத்திலும் கன்னியாகுமரி 4ஆம் இடத்திலும் திருச்சி 5ஆம் இடத்திலும் உள்ளது.
இதன் வரிசையில் சென்னை 89.14 சதவிகித தேர்ச்சியுடன் 30ஆம் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு சென்னை 29வது இடம் பிடித்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஒரு இடம் பின் தங்கியுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடைசி 10 இடங்களில் வட மாவட்டங்கள் உள்ளன.
சென்னை, திருப்பத்தூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு கள்ளக்குறிச்சி திருவள்ளூர் திருவண்ணாமலை ராணிப்பேட்டை வேலூர் ஆகியவை கடைசி 10 இடங்களில் உள்ளன.
பள்ளிகள் வாரியாக பார்த்தால், அரசுப் பள்ளிகள் 87.90%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 91.77%, தனியார் பள்ளிகள் 91.43%, இருபாலர் பள்ளி 91.93%, பெண்கள் பள்ளிகள் 93.80% என தேர்ச்சி விகிதம் இருக்கிறது.
இந்நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவிகளுக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது x பதிவில்,
"தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள்.
அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குகளுடன், வாழ்வின் பல்வேறு துறைசார்ந்த வெற்றிகளைக் குவித்து, வருங்காலச் சமூகத்தின் சாதனைச் சிற்பிகளாக வலம் வர இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார். மேலும் விரைவில் சந்திப்போம் என்றும் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு, 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களை அழைத்து அவர்களுக்கு உதவித்தொகை மற்றும் பரிசுகளை விஜய் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications