விஜய் போடும் மாஸ்டர் ஸ்கெட்ச்.. பிளானில் உள்ளே வரும் டெல்லி.. அடுத்து நேரடி அரசியல்தான்.. பரபர தகவல்
சென்னை: நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இது தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் எப்போதும் அரசியலுக்கும் சினிமாவுக்கும் வலுவான தொடர்பு இருக்கிறது. அண்ணா, கருணாநிதி தொடங்கி சினிமா துறையுடன் தொடர்பில் இருந்தவர்களே ஆட்சியைப் பிடித்துள்ளனர்.

இந்த லிஸ்டில் அடுத்து விஜய் இணையப் போவதாகவே கடந்த சில ஆண்டுகளாகப் பேச்சுகள் இருக்கிறது. அவரது செயல்பாடுகளும் கூட அவர் அரசியலுக்கு வருவதைக் குறிக்கும் விதமாகவே இருக்கிறது.
விஜய் மக்கள் இயக்கம்: 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட போதிலும், விஜய் படத்தையும், விஜய் மக்கள் இயக்க கொடியைப் பயன்படுத்தவும் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது இதுவே முதல்முறை.. மேலும், தேர்தலில் வென்றவர்களை அழைத்து விஜய் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இப்படிப் பல விஷயங்களை நாம் சொல்லலாம்.
குறிப்பாக லியோ வெற்றி விழாவில் 2026 சட்டசபைத் தேர்தல் குறித்த கேள்விக்கு "கப் முக்கியம்" என்று சொல்லிப் பரபரப்பைக் கிளப்பினார். மேலும்,. அரசியல் தலைவர்கள் பிறந்த நாள்களுக்கு வாழ்த்து சொல்வது, படிப்பகங்களை ஆரம்பிப்பது, புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி பொருட்களை வழங்குவது என்று அவரது பேச்சுகள் மிகப் பெரியளவில் ஊடக வெளிச்சத்தையும் பெற்று வருகிறது.
டெல்லி பயணம்: இந்தச் சூழலில் சென்னையை அடுத்த பனையூரில் விஜய் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். சுமார் 3 மணி நேரம் நடந்த அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. குறிப்பாக விஜய் மக்கள் இயக்கத்தைக் கட்சியாக மாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. கட்சியின் பெயர் கழகம் என்று முடியும் வகையில் இறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது.
விரைவில் மக்கள் இயக்கத்தைக் கட்சியாகப் பதிவு செய்ய மக்கள் மன்றத்தினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக விஜய் மக்கள் மன்றத்தினர் டெல்லி செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிப். முதல் வாரத்தில் விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் டெல்லி செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது கட்சி பதிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
திட்டம் என்ன: வரும் 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதே சரியாக இருக்கும் என்று விஜய் ஆலோசனைக் கூட்டத்தில் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.. அடுத்த இரண்டு ஆண்டுகள் மக்கள் மன்றத்தினர் தொடர்ச்சியாக களப்பணியாற்ற வேண்டும் என்றும் அதன் பிறகு தேர்தலில் நின்றால் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
விஜய்யின் அரசியல் பயணம் தொடர்பாகத் தொடர்ச்சியாகப் பல வித கருத்துகள் வெளியாகி வரும் நிலையில், அவரது மக்கள் மன்ற நிர்வாகிகள் டெல்லி செல்வது ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications