திடீரென வங்கி கணக்குகளில் வந்து விழுந்த பணம்.. கஜா புயல் நிவாரணத்திற்காக பல லட்சம் வழங்கிய விஜய்
Recommended Video
சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு, உதவி செய்வதற்காக பல லட்சம் ரூபாய்களை நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு வங்கி கணக்கு மூலமாக அனுப்பி வைத்துள்ளார்.
கஜா புயல் காரணமாக 7 மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. அங்குள்ள மக்கள், தென்னை, பலா போன்ற வாழ்வாதார மரங்களை இழந்து அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற தவிப்பில் உள்ளனர்.
அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையும் அவர்களின் ஏக்கத்தை தீர்ப்பதாகவோ, வாழ்க்கையை வளப்படுத்த உதவி செய்வதாகவோ இல்லை.
மக்கள் மன்றம்
இந்த நிலையில், நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு, வங்கி கணக்கில் பணம் அனுப்பி, அதை அந்தந்த மாவட்டங்களில் செலவிடும்படி கேட்டுக்கொண்டுள்ளார். நாகை, கடலூர் உள்ளிட்ட புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட நிர்வாகிகளுக்கும் இவ்வாறு விஜய் இன்று பணம் அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உதவி பொருட்கள்
நாகை மாவட்டத்திற்கு, மெழுகுவர்த்தி, பால், வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று நாகை தெற்கு மாவட்ட 'விஜய் மக்கள் இயக்கம்' தலைவர் சுகுமாரை போனில் தொடர்பு கொண்டு விஜய் தெரிவித்துள்ளார். இவற்றின் மதிப்பு சுமார் 5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
வங்கி கணக்கில் பணம்
இதேபோன்று கடலூர் மாவட்டம் மக்கள் இயக்கத் தலைவர் சீனு என்பவரின் வங்கி கணக்கில் , 4.50 லட்சம் ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு உதவுகிற வகையில் செலவு செய்யுமாறு கூறி இந்த பணத்தை விஜய் அனுப்பி வைத்துள்ளார்.
திடீரென வந்த பணம்
மதுரை மாவட்ட மக்கள் இயக்கத் தலைவர் தங்கபாண்டியனின் வங்கிக் கணக்கிற்கும் 2 லட்சம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் தகவல் வெளிவராத மேலும் பல மன்ற நிர்வாகிகளுக்கும் இவ்வாறு விஜய் பணத்தை அனுப்பி வைத்து, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.