விஜய் வெளியிட்ட அறிக்கை! இதை கவனிச்சீங்களா? பாஜகவுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த 'தமிழக வெற்றி கழகம்'
சென்னை: நீண்ட எதிர்பார்ப்புக்கு பின்னர் நடிகர் விஜய் அரசியலில் நுழைந்திருக்கிறார். இன்று அவரது கட்சியின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் 'சாதிமத பேதமற்ற அரசியல்' என குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் கவனம் ஈர்த்திருக்கிறது.
இந்தியா என்பது ஒரு நாடாக இருந்தாலும், ஒவ்வொரு மாநிலங்களின் தன்மை என்பது வேறு. குறிப்பாக அரசியல் தன்மை என்பது மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். வட மாநிலங்களுக்கும், தென் மாநிலங்களுக்குமான அரசியல் என்பது தலைகீழானது. இன்னும் விளக்கமாக சொல்வதெனில் பெரும்பான்மை மக்கள் உயர்த்திப் பிடிக்கும் அரசியலுக்கு நேர் எதிராக தென் மாநிலங்கள் இருக்கிறது. இதற்கு ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன.

நாடே அயோத்தி கோயில் திறப்பை கொண்டாடி கொண்டிருந்த நிலையில், தென் மாநில மக்கள் அந்த நாளை, சாதாரண நாளாக கடந்து சென்றனர். அதாவது மதம் அரசியலில் கலப்பதை இம்மக்கள் விரும்புவதில்லை. அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை போல, அரசாங்கம் என்பது எந்த ஒரு மதத்துடனும் தன்னை சம்பந்தப்படுத்திக்கொள்ளக்கூடாது, அல்லது தனிச்சலுகை வழங்கக்கூடாது என்பதை தென் மாநில மக்கள் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.
எனவேதான் இன்றும் பாஜக தென் இந்தியாவில் வலுவாக கால் ஊன்ற முடியாமல் திணறி வருகிறது. இப்படி இருக்கையில் தமிழகத்தின் அரசியல் தன்மைக்கு ஏற்றார்போல விஜய் தன்னுடைய கொள்ளையை வெளிப்படுத்தியிருக்கிறார். அதாவது, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும், என் பணிவான வணக்கங்கள். 'விஜய் மக்கள் இயக்கம்' பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.
தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் 'ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்' ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் 'பிளவுவாத அரசியல் கலாச்சாரம்' மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன.
ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' (பிறப்பால் அனைவரும் சமம் ) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதன் மூலம் அவர் -சாதிமத பேதமற்ற- பாஜகவுக்கு எதிராக அரசியலை கையில் எடுக்கிறார் என்பது ஓரளவுக்கு தெளிவாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே விஜய் ஒரு கிறிஸ்தவர் என இந்துத்துவா அமைப்பினர் கடுமையாக விமர்சித்து வந்திருந்தனர். இப்படி இருக்கையில், அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் விமர்சகர்கள் கூறியுள்ளனர். எனவே இந்த அறிக்கையின் மூலம் பாஜகவுக்கு விஜய் பதிலளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications