ரோல்ஸ் ராய்ஸ் விவகாரம்.. ஹைகோர்ட்டில் நடிகர் விஜய் மேல்முறையீடு.. தன் மீதான விமர்சனத்தை நீக்க கோரிக்கை
சென்னை: ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். 2012-ல் தான் ரூ.1.88 கோடி மதிப்பில் தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
2012-ல் நடிகர் விஜய் தொடர்ந்திருந்த இந்த வழக்குக்குக் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப்பிறகு சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கினார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம்.

ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது
நடிகர் விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்ததுடன் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தது. அந்த அபராதத் தொகையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி அதிரடியாக உத்தவிட்டார். மேலும், ''சமூக நீதிக்குப் பாடுபடுவதாகச் சொல்லும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது.

தமிழ்நாட்டின் ஹாட் டாபிக்
வரி என்பது நன்கொடையல்ல; கட்டாய பங்களிப்பு. நடிகர்களுக்கு வானத்தில் இருந்து பணம் வரவில்லை. ஏழைமக்களிடம் இருந்துதான் அவர்களுக்கு பணம் கிடைக்கிறது'' என்று கடுமையாக கண்டனத்தை பதிவு செய்து இருந்தார் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம். கடந்த 2 நாட்களாக இந்த விவகாரம்தான் தமிழ்நாட்டின் ஹாட் டாபிக் ஆக இருக்கிறது.

சீமான் ஆதரவு
இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் உலா வந்தன. நடிகர் விஜய் செய்தது அவ்வளவு பெரிய குற்றமா? சச்சினுக்கு மட்டும் ஏன் வரிவிலக்கு கொடுத்தார்கள்? என்று விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் உள்பட பலர் பொங்கியெழுந்தனர். நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

நடிகர் விஜய் மேல்முறையீடு
இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் மேல்முறையீடு செய்வார் என்று தகவல்கள் வெளியான நிலையில் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் நடிகர் விஜய். நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விதித்த ரூ.1 லட்சம் அபாரதத்தை ரத்து செய்ய வேண்டும் என்றுவிஜய் தனது மனுவில் கூறியுள்ளார்.

விசாரணை எப்போது?
மேலும், தீர்ப்பின்போது நீதிபதி தன்னை பற்றி குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்கவும் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பு நகலின்றி மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு பட்டியலிட கோரிக்கை விடுத்துள்ளார். நடிகர் விஜய்யின் இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சுந்தரேஷ், மஞ்சுளா ஆகிய அமர்வில் திங்கட்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications