அடுத்த பிளான்.. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்.. மக்களை நேரடியாக சந்திக்க விஜய் திட்டம்?
சென்னை: நடிகர் விஜய் கடந்த 2 நாட்களாக சென்னையில் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்தார். 234 தொகுதிகளிலும் இரவு பாட சாலை திட்டத்தை நடிகர் விஜய் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் விஜயின் மற்றொரு முக்கிய பிளான் குறித்த தகவலும் கசிந்துள்ளது.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய். சமீப காலமாக விஜயின் செயல்பாடுகள் அவரது அரசியல் ஆசையை வெளிப்படுத்தும் விதமாக இருக்கிறது. குறிப்பாக கடந்த மாதம் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்ததோடு கல்வி ஊக்கத்தொகையையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 1,500 மாணவர்களையும் தனித்தனியே சந்தித்து விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மிகவும் களைப்படைந்த போதிலும் முகத்தில் அதை காட்டிக்கொள்ளாமல் விஜய் மாணவ மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார். முன்னதாக நிகழ்ச்சியின் துவக்கத்தில் பேசிய விஜய், படிப்பை மட்டும் உங்களிடம் இருந்து எடுக்க முடியாது என்ற அசுரன் பட டயலாக்கை பேசினார்.
மேலும், படிப்பை தாண்டி என்ன பேசுவது என்று தெரியவில்லை. இளம் தலைமுறையினர் முக்கியமாக பெரியார், அண்ணா, காமராஜரை பற்றி மாணவர்கள் படிக்க வேண்டும். புதிய நல்ல தலைவர்களை வருங்கால வாக்காளர்கள் தேர்வு செய்ய வேண்டும். ஆனால் நம்ம விரல வச்சு நம்ம கண்ணையே குத்துறதை கேள்வி பட்டதுண்டா? அதுதான் இப்போது நடந்துட்டு இருக்கு.. அதைத்தான் நாமும் செய்துகொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு மாணவ - மாணவியரும் தங்கள் பெற்றொரிடம் இனிமேல் காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீங்க... என்று சொல்லி பாருங்கள். சும்மா... முயற்சி பண்ணி பாருங்க... நீங்கள் முயற்சித்தால் கண்டிப்பாக நடக்கும். ஏனெனில் வரும் ஆண்டுகளில் நீங்கள் வாக்காளர்களாக வரப்போகிறீர்கள்" என்று பேசினார். விஜய் மாவட்டத்திற்கு சிறந்த மாணவ மாணவிகள் என தேர்வு செய்யாமல் தொகுதிக்கு மூன்று மாணவ மாணவிகளை தேர்வு செய்ததிலே அவரது அரசியல் நகர்வு தென்படுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
அதுபோக, மாணவ மாணவிகள் முன்னிலையில் வாக்குக்கு காசு வாங்க வேண்டாம் என அரசியல் நெடி கலந்தே அவர் பேசியது விஜயின் அடுத்த மூவ் எதை நோக்கி இருக்கப் போகிறது எனபதையே காட்டுவதாக இருந்தாக பரபரப்பாக பேசப்படது. இந்நிலையில், கடந்த 2 தினங்களாக மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், தங்களது குடும்பத்தை கவனித்து கொண்டே நற்பணியில் ஈடுபட வேண்டும் என்று விஜய் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் காமராஜர் பிறந்த நாளில் தமிழகம் முழுவதும் இந்த இரவு பாட சாலை திட்டத்தை விரிவுபடுத்த விஜய் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியது. இதனிடையே, விஜய், தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு மக்களை நேரில் சந்திக்க இருப்பதாகவும் மக்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து கொண்டு பின்னர், அரசியலில் ஈடுபடுவது குறித்த அறிவிப்பை வெளியிட விஜய் திட்டமிட்டு இருப்பதாகவும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மத்தியில் பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications