நினைச்சது கிடைக்கலனா? கிடைச்சத நினைக்கனும்! தவெக தளபதி விஜய்க்கு சிக்கல்! புலம்பும் நண்பா, நண்பீஸ்.!
சென்னை: நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை திருச்சி பொன்மலை ஜி-கார்னர் மைதானத்தில் நடத்த திட்டமிட்டு, இதற்காக அனுமதி கேட்டு ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு கடிதம் வழங்கியுள்ளார். இந்நிலையில் அதே நாளில் தங்களுக்கும் மாநாடு நடத்த அனுமதிக்கக் கோரி சாதி சங்கம் ஒன்று கடிதம் வழங்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவலால் தவெக தொண்டர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மறுபடியும் பிரச்சினையா? என தலைமைக் கழக நிர்வாகிகளே புலம்புகின்றனராம்..
தமிழ் திரையுலகில் நம்பர் ஒன் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்போது அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கிறார். கோட் படத்திற்கு பிறகு அவர் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் அவரது ரசிகர்கள் ஒரு பக்கம் ஆர்வத்துடனும், மறுபக்கம் ஏமாற்றத்துடன் இருக்கின்றனர்.

கோட் படம் முடிவடைந்த பிறகு அதற்கு பிறகு ஒரு படம் நடித்துவிட்டு தீவிர அரசியலுக்கு விஜய் வருவார் என கூறப்பட்டது. இதற்கு முன்னதாகவே தனது கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததோடு தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரையும் வெளியிட்டார் விஜய்.
இதை அடுத்து தொடர்ந்து அறிக்கை அரசியல் மட்டுமே செய்து வந்த விஜய் 2025ஆம் ஆண்டில் தீவிர அரசியலில் கால் வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தனது கட்சியின் கொள்கைகள், கொடி உள்ளிட்டவற்றை விஜய் வெளியிட இருக்கிறார். இதற்காக மிக பிரம்மாண்டமாக மாநில மாநாட்டை நடத்திவிட வேண்டும் என திட்டமிட்டு அதற்கான பணிகளை முன்னெடுத்து இருக்கிறார் விஜய்.
கோட் படத்தில் நடித்து வந்தாலும் மாநாட்டு வேலைகளையும் அவர் கவனித்து வருகிறார். இதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பயணம் மேற்கொண்டு இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். ஆனால் மாநாட்டுக்கு பல்வேறு சிக்கல்கள் இருந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே பல அரசியல் கட்சிகள் மாநாடு நடத்திய மதுரை, சேலம், திருச்சி ஆகியவை முதல் மாநில மாநாட்டு பட்டியலில் இருந்தன.
எம்ஜிஆர், விஜயகாந்த், கமல் உள்ளிட்டோர் மாநாடு நடத்திய மதுரை சிறுகனூர் பகுதியில் தங்கள் கட்சியின் முதல் மாநாட்டை நடத்த வேண்டும் என விஜய் விரும்பினார். ஆனால் அங்கு இடம் தருவதாக கூறியவர்கள் கடைசி நேரத்தில் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சேலம் தலைவாசல், காக்காபாளையம் ஆகிய பகுதிகளில் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் செய்தனர். ஆனால் அங்கு இடம் போதாது, போக்குவரத்து வசதியும் இல்லை என சில நிர்வாகிகள் கூறியதாக கூறப்படுகிறது.
இதை அடுத்து தமிழகத்தின் மையப் பகுதியில் இருக்கும் திருச்சி பொன்மலை ஜி -கார்னர் மைதானத்தில் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது,”அரசியல் அழுத்தம் காரணமாக மதுரை சேலம் உள்ளிட்ட பகுதிகளில் மாநாடு நடத்த இடம் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் திருச்சி பொன்மலை ஜி-கார்னர் ரயில்வே மைதானத்தில் மாநாடு நடத்த இடம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த தகவல் எனக்கே தெரியாது. மாநாடு குறித்த தகவல்களை ஆமாம் சொல்லவும் முடியாது. இல்லை என்று சொல்லவும் முடியாது/ எனக்கே சஸ்பென்சாக இருக்கிறது” என கூறினார். சொந்த கட்சி மாவட்ட செயலாளருக்கே திருச்சியில் தான் மாநாடு நடக்குமா என்பது தெரியாத நிலையில் தொண்டர்கள் கடும் குழப்பத்தில் இருக்கின்றனர்.
இது மட்டுமல்லாமல் செப்டம்பர் 20ஆம் தேதியிலிருந்து 23ஆம் தேதிக்குள் ஏதாவது ஒரு தேதியில் மாநாடு நடத்த வேண்டும் என விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் ரயில்வே நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்திருக்கின்றனர். ஆனால் ஏதாவது ஒரு குறிப்பிட்ட தேதியை தர வேண்டும் என ரயில்வே நிர்வாகம் கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் அதே தேதியில் தங்கள் சாதி சங்க மாநாடு நடத்த அனுமதிக்க வேண்டுமென ஒரு குறிப்பிட்ட சமுதாய நிர்வாகிகள் மனு கொடுத்து இருக்கின்றனர்.
பெரிய அளவிலான செல்வாக்கு அந்த சாதிச் சங்க அமைப்புக்கு இல்லாத போதிலும் பிரபல அரசியல் கட்சி ஒன்றின் அழுத்தம் காரணமாகவே அதே தேதியில் மாநாடு நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்திருப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க குறிப்பிட்ட ஜீ-கார்னர் மைதானம் விஜயின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாடு, உணவு, கழிப்பிடம், பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளுக்கு கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு நிலம் தேவைப்படும். ஆனால் பொன்மலை ஜி-கார்னர் மைதானம் வெறும் 10 ஏக்கர் பரப்பளவு மட்டுமே கொண்டது. அதிகபட்சம் ஒரு லட்சம் பேர் வரை மட்டுமே மாநாட்டில் கலந்து கொள்ள முடியும்.
இதனால், திருச்சி பொன்மலை ஜி-கார்னர் மைதானம் விஜய்யின் விருப்பங்களுக்கு ஏற்ற மைதானமாக இருக்குமா? என்பது கேள்வியாக எழுந்திருக்கிறது. அது மட்டும் அல்லாமல் மாநாடு நடைபெற்றாலும் விஜய்யின் கொள்கைகள் என்ன? கொடி, கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விவரங்களை தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகளும் நடிகர் விஜய்யின் ரசிகர்களும்..












Click it and Unblock the Notifications