தொட்டதெல்லாம் துலங்குதா? "திராவிட கட்சிகளை" திகைக்க வைத்த நடிகர் விஜய்.. தலைகீழா மாறுதா தமிழக அரசியல்
சென்னை: பழுத்த மூத்த தலைவர் புதுச்சேரி ரங்கசாமி, நடிகர் விஜய்யை அன்று நேரில் சந்தித்து பேசியபோதே, ஏதோ பெரிய பிளான் விஜய்க்கு இருக்கிறது போலும் என்ற வியூகங்கள் வலம்வந்தன.
இதோ அடுத்தடுத்து நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை பார்த்தால், விஜய்யின் அரசியல் உறுதியாகி கொண்டு வருகிறது.. அதேசமயம், அவர் என்ன மாதிரியான அரசியலை முன்னெடுக்க போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் எழுந்து வருகிறது.
சமீபத்தில் விஜய் பேசிய பேச்சிலிருந்து, வழக்கத்துக்கு மாறான அரசியல் வாடை தெறித்து விழுந்தது.. நடிகர்கள் இயல்பாக செய்யும், நலப்பணிகள், நலத்திட்ட உதவிகள் என்று மட்டுமே அதை எடுத்துக் கொண்ட கடந்துவிட முடியவில்லை.

சமூகத்தில் சமநிலை வேண்டும் என்று உரக்க குரலெழுப்பிய அம்பேத்கரும், பெரியாரும், காமராஜரும் மாறி மாறி விஜய்யின் பேச்சில் நினைவுகூரப்பட்டனர். அத்துடன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாணியும் அவரிடம் தென்பட்டதை உணர முடிந்தது.
தமிழ்தேசியம்: அதாவது, பெரியாரை முன்னிலைப்படுத்தியிருந்த விஜய், மறைந்த முதல்வர்கள் அண்ணாவின் பெயரையோ, கலைஞர் பெயரையோ சொல்லவில்லை.. மாறாக, பெரியார், அம்பேத்கர், காமராஜர் பெயரை மட்டுமே முன்னிலைப்படுத்தியதால், இந்துத்துவாவுக்கு எதிரான அரசியலை கையில் எடுக்க போகிறாரா? என்ற சந்தேகத்தையும் அதிகப்படுத்தியிருந்தார். அதேசமயம், தமிழ்த் தேசிய சிந்தனைகளிலும் அவரது ஈடுபாடு இருப்பதாக தெரியவில்லை.
அப்படியானால், விளிம்பு நிலை மக்களுக்கான அரசியலை மட்டுமே விஜய் முன்னெடுக்கக்கூடும் என்றும் அனுமானங்கள் சொல்கின்றன.. சுருக்கமாக சொல்லப்போனால், அது மாதிரியும் இல்லாமல், இது மாதிரியும் இல்லாமல், புது மாதிரியான அரசியலாக இருக்கும் என்றே தெரிகிறது.
விஜய் அரசியல்: அதுமட்டுமல்ல, விஜய்யின் இலக்கு, எம்பி தேர்தலைவிட, தமிழக சட்டப்பேரவை தேர்தலை மையப்படுத்தியே இருக்கலாம் என்றும், வேண்டுமானால், இந்த எம்பி தேர்தலை 'வெள்ளோட்டமாக' விஜய்யின் மக்கள் இயக்கம் பயன்படுத்தி கொள்ள நிறைய வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.. ஒருபக்கம் நலப்பணி திட்டங்கள் நடந்து கொண்டிருக்க, மறுபக்கம் "தொகுதி வாரி" என்ற சொல் தவறாமல் இடம்பெறுவதும் அரங்கேறி வருகிறது.
மாணவர்களை அழைத்து பாராட்டுவது, உதவித்தொகை வழங்குவது, இரவு நேர பயிலகம், சட்டம் தொடர்பான வகுப்புகள் என தீவிரமாக செயல்பட்டுவரும்நிலையில், அடுத்துக்கட்டத்துக்கு நகர்ந்துள்ளது விஜய்யின் ஐடி விங்.. காரணம், அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து ஒரு அழைப்பு விடுத்துள்ளார்..
அழைப்பு: அதில், "ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் வாயிலாக மாவட்டம், இளைஞரணி, தொண்டரணி, மாணவரணி, வழக்கறிஞர் அணி, மகளிர் அணி, வர்த்தக அணி, விவசாய அணி, தொழிற்சங்க அணி, ஊடக அணி மற்றும் நகரம், ஒன்றியம், வார்டு, பகுதி, கிளை, பூத் கமிட்டி உறுப்பினர் வரை செயல்வீரர்களாக செயல்படுவது குறித்தான (IT Wing) ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
வருகின்ற சனிக்கிழமை (26.08.2023) அன்று காலை 8.55 மணியளவில் சென்னை பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை தளபதி மக்கள் இயக்க அலுவலகத்தில் நடைபெற உள்ளதால் தங்கள் மாவட்டத்தில் உள்ள தொகுதிக்காக பரிந்துரை செய்த மூன்று (IT Wing) நபர்களை தவறாமல் தங்களுடன் ஆலோசனை கூட்டத்திற்கு அழைத்து வந்து கலந்துகொள்ளுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல்: விஜய்யின் மக்கள் இயக்கத்தை பொறுத்தவரை, கடந்த வருடம் நடந்த ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.. 9 மாவட்டங்களில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்டு பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி உட்பட 77 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றது..
அதாவது, நாம் தமிழர், தேமுதிக போன்ற சீனியர் அரசியல் கட்சிகளைவிட, ஜூனியர் அமைப்பான 'விஜய் மக்கள் இயக்கம்" சிறப்பாக செயல்பட்டு அப்ளாஸை அள்ளியிருந்தது.
வாக்கு வங்கி: தலைவர்கள் பேசி பேசி வாங்கிய வாக்குகளைவிட, பேசாமலேயே இந்த சாதனையை விஜய் அப்போது புரிந்திருந்தார்.. இப்போதுகூட நடக்க போகும் தேர்தல் குறித்து, விஜய், வாய் திறக்கவேயில்லை.. கட்சி குறித்தோ, அரசியல் நிலைப்பாடுகள் குறித்தோ எதுவுமே வெளிப்படையாக அறிவிக்கவில்லை.. அதிகாரப்பூர்வமான தகவலையும் தரவில்லை..
சபாஷ் அதிரடி: ஆனாலும், அவரது இயக்கமும், அவரது செயல்பாடுகளும், விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பை அவரது ரசிகர்களிடமும், பொதுமக்களிடம் ஏற்படுத்தி வருகிறது. சுருக்கமாக சொல்லப்போனால், விஜய்யின் மக்கள் இயக்கம், அரசியல் இயக்கமாக மெல்ல மெல்ல தமிழகத்தில் மாறிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை..!!!












Click it and Unblock the Notifications