கல்வி விருது.. நேரில் சந்திந்து பரிசளித்த விஜய்..நெகிழ்ந்த மாணவர்கள்..அரசியல் பயணமா?
சென்னை: கல்வி விருது வழங்கும் விழாவை முன்னிட்டு தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்புத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை நடிகர் விஜய் இன்று நேரில் சந்தித்து பரிசளித்தார். விஜய் மேடைக்கு வந்த உடன் உற்சாக வரவேற்பளித்த மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். மாணவர்களுக்கு கல்வி உதவி ஊக்கத் தொகை கொடுத்ததன் மூலம் தனது அரசியல் பயணத்தை விஜய் தொடங்கி விட்டதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
நடிகர் விஜய் தன் தொண்டர்கள் மூலம் பல சமூக சேவைகளை செய்து வருகிறார். அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என விஜயகாந்த் பாணியில் ரசிகர்களை சந்தித்து வருகிறார். விஜயகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்காக போஸ்டர்கள் ஒட்டியும் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் விஜய்யின் பிறந்தநாள் நேரத்தில் ஏதாவது முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். இந்த நிலையில்தான் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை சந்திக்கவுள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளில் உள்ள 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற தலா மூன்று மாணவர்கள் வீதம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு பரிசு, கல்வி உதவித் தொகை வழங்குவார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று (சனிக்கிழமை) காலை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த விழாவில் சுமார் ஆயிரத்து 1,500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொள்கின்றனர். அதேசமயம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார். இதற்காக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கு மூன்று வேளை விருந்தளிக்கப்பபோவதாக கூறப்பட்டது.
நடிகர் விஜய்யை நேரில் சந்திப்பது மகிழ்ச்சியளிப்பதாக மாணவ மாணவிகள் கூறியுள்ளனர். நெல்லையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி பேருந்து மூலம் அனுப்பி வைத்தனர். நடிகர் விஜய்யை நேரில் சந்திக்க விருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர். இது எதிர்பாராத அறிவிப்பு எக்ஸைட் ஆக இருப்பதாகவும் மாணவ மாணவிகள் கூறினர்.
நடிகர் விஜய்யின் இந்த செயல் அரசியல் வருகைக்கான முன்னோட்டமாக இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எம்ஜிஆர், விஜயகாந்த், கமல்ஹாசன் போல நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவரது ரசிகளின் விருப்பம். பல்வேறு விதங்களில் அதனை தெரியப்படுத்துவதை ரசிகர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால் விஜய் அது குறித்து இப்போது வரை வாய் திறக்கவில்லை. நடிகர் விஜய்யும் வெளிப்படையாக அரசியல் குறித்து அறிவிக்காவிட்டாலும், ரசிகர் மன்றத்தை எல்லாம் விஜய் மக்கள் இயக்கம் என ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகின்றனர்.
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துக் கடந்த சில ஆண்டுகளாகவே பேச்சு உள்ளது. அதற்கேற்ப விஜய்யின் படங்களிலும் அரசியல் வசனங்கள் தவறாது இடம் பெறுகின்றன. தலைவா படத்தில் டைம் டூ லீட் என்ற வாசகம் இடம் பெற்றது. கத்தி, மெர்சல், சர்க்கார் என அடுத்தடுத்த படங்களிலும் அரசியல் வசனங்கள் இடம் பெற்றன. ஆடியோ வெளியீட்டின் போது அரசியல் திட்டம் குறித்துத் தொடர்ந்து மறைமுகமாக வெளிப்படுத்தி வருபவர் விஜய். ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாளின் போது அவரது ரசிகர்கள் ஒட்டும் வாழ்த்து போஸ்டரில் அரசியலுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுப்பார்கள்.
கடந்த ஆண்டு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு அனுமதி அளித்தார் விஜய். தனது பெயரையும் படத்தையும் பயன்படுத்த அனுமதி அளித்தார் விஜய். விஜய் ரசிகர்கள் வெற்றி பெற்று விஜய் கட்சியின் அரசியல் பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டனர். வெற்றி பெற்ற ரசிகர்களை சந்தித்தார் விஜய்.
விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் நிறைய உதவிகளை செய்து வருகிறார். அது போல் அவரது ரசிகர்களையும் மக்கள் நல பணிகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தி வருகிறார். மழை, வெள்ளப் பாதிப்பு, கொரோனா ஊரடங்கு காலத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பொதுமக்களுக்கு நிறைய உதவிகளை செய்திருந்தனர். அதன் பலனை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அறுவடை செய்தனர். கணிசமான அளவில் வெற்றி பெற்றனர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.
உள்ளாட்சித் தேர்தலில் ஆழம் பார்த்த விஜய், அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறார். கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாட வேண்டும் என்றும், அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதன்மூலம் நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதற்கான அறிகுறி தான் என்று தகவல் பரவியது.
இந்த நிலையில்தான் நடிகர் விஜய் அடுத்த தலைமுறை வாக்காளர்களான மாணவர்களை சந்திக்கப்போவதாகவும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். மாணவர்களை இன்றைய தினம் சந்திக்க உள்ள நிலையில் பேனர்கள் கட் அவுட்கள் எதுவும் வைக்கக்கூடாது என்று தனது ரசிகர்களுக்கு கட்டளையிட்டுள்ளார் நடிகர் விஜய். இதனையடுத்து சுவர் விளம்பரங்களை மட்டுமே செய்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.
நடிகர் விஜய் கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க மேடைக்கு வந்த போது பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் நெகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் நடிகர் விஜய்க்கு பரிசளித்தார். அதனை நெகிழ்ச்சியுடன் பற்றுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications