நடிகை அபிராமி உயிர் பிழைச்சதே பெரிசு.. விஜய் சேதுபதி செருப்பெல்லாம் பிஞ்சிருச்சு: மன்சூர் அலிகான்
சென்னை: விஜயகாந்த்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்தபோது கூட்டத்தில் நடிகர், நடிகைகள் நசுங்கிவிட்டனர், விஜய் சேதுபதி செருப்பு, பட்டன் எல்லாம் பிய்ந்துவிட்டது எனக் கூறியுள்ளார் மன்சூர் அலிகான்.
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் காலமான நிலையில், அவரது உடலுக்கு லட்சக்கணக்கானோர் திரண்டு நேரில் அஞ்சலி செலுத்தினர். திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். எனினும், சில முன்னணி நடிகர்கள் வெளிநாடுகளில் இருந்ததால் நேரில் அஞ்சலி செலுத்தவில்லை.

நடிகர் சங்கத்திற்கு ஏராளமான நன்மைகளைச் செய்த விஜயகாந்த் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பெரும்பாலான நடிகர்கள் வராதது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த மன்சூர் அலிகான், "திடீர் இறப்பால், வெளிநாடுகளில் இருந்தவர்கள் அவசரமாக வர முடியாமல் போயிருந்திருக்கலாம். நடிகர் சங்கம் சார்பில் நாசர் உள்ளிட்டவர்கள் எல்லாம் வந்தார்கள்.
நடிகர் சங்கம் சார்பில் ஊர்வலமாகப் போய் அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டது. நானும் கேள்விப்பட்டு, ஊர்வலமாக செல்வதற்காக பிரயத்தனம் செய்தோம். விஜய் ஹோட்டலில் இருந்து 100 அடி சாலையில் செல்லும்போது கூட்டம் கடுமையாக இருந்தது. நடிகை அபிராமி எல்லாம் நசுக்கப்பட்டு, அவர் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம்.
கோவை சரளா, உடன் வந்த பல நடிகைகள் கூட்டத்தில் நசுங்கினர். நடிகர் விஜய் சேதுபதியை எல்லாம் நசுக்கி சட்னி ஆக்கி விட்டார்கள். அவரது சட்டை பட்டன், செருப்பு எல்லாம் பிய்ந்துவிட்டது. அந்தளவு கட்டுக்கடங்காத கூட்டம். காவல்துறையினர் முடிந்த அளவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்" எனத் தெரிவித்தார்.
விஜய், விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது அவருக்கு எதிராக கோஷம் எழுப்பி காலணியை வீசியதாக கூறப்படுவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த மன்சூர் அலிகான், "அந்த மாதிரி எல்லாம் திட்டமிட்டு எதுவும் செய்திருக்க மாட்டார்கள். மிகப்பெரிய கூட்டத்தில் யாராவது விஷமிகள் யாராவது செய்திருப்பார்கள். உண்மையான விருப்பு வெறுப்புகளில் அதையெல்லாம் கணக்கில் சேர்க்கக்கூடாது. விஜய், கேப்டன் விஜயகாந்த் மீது பேரன்பு மிக்கவர். அவருடன் நடித்து அவரை வளர்த்து விட்டவர் கேப்டன்." என்றார்.
நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று நடிகர் விஜய் நிவாரண உதவிகளை வழங்கியது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த மன்சூர் அலிகான், "பாராட்ட வேண்டும். சிறப்பாக செய்கிறார்கள். நான் இங்கு மசாஜ் சென்டரில் உட்கார்ந்து கொண்டு பேட்டி கொடுக்கிறேன். அவர்கள் நேரில் போய் நல்லது செய்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications