விஜய் தேர்தலில் நின்று ஒரு கவுன்சிலர் ஆகட்டும்.. அப்புறம் பேசலாம்: கொதித்த திமுக எம்.எல்.ஏ எழிலரசன்!
சென்னை: நடிகர் விஜய் முதலில் தேர்தலில் நின்று ஒரு கவுன்சிலர் ஆகட்டும், அதன் பிறகு கருத்து சொல்லலாம் என திமுக மாணவர் அணி செயலாளர் சிவிஎம்பி எழிலரசன் எம்எல்ஏ கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், "சம்பிரதாயத்திற்காக மழை தண்ணீரில் நின்று போட்டோ எடுக்கும் அரசியல்வாதி நான் அல்ல. மக்களோடு என்றும் நான் இருப்பேன். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன், அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவிலேயே கலந்து கொள்ள முடியாத அளவுக்கு கூட்டணி கட்சியின் அழுத்தம் இருந்தாலும், அவரது மனம் முழுவதும் இங்கதான் இருக்கும். திருமாவிற்கு கொடுக்கப்படும் பிரஷரை என்னால் முழுமையாக உணர முடிகிறது.

விஜய் பேச்சால் சலசலப்பு: மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத, மக்களுக்கு அடிப்படை பாதுகாப்பை கூட உறுதி செய்ய இயலாத, கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இறுமாப்புடன் 200 தொகுதிகளில் வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு, என் மக்களோடு இணைந்து நான் விடும் எச்சரிக்கை. நீங்கள், உங்கள் சுய நலனுக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்." எனப் பேசினார்.
திமுக எம்.எல்.ஏ காட்டம்: இதற்கு, திமுக மாணவரணி மாநில செயலாளர் சிவிஎம்பி எழிலரசன் எம்.எல்.ஏ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "ஒரு புதிய கட்சியை தொடங்குகிறவர்கள், மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த என்ன செய்யவேண்டுமோ அதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, திமுகவை விமர்சிப்பதில் மட்டுமே ஒரு அரசியல் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து பேசுவார்கள் என்றால் அதனை மக்கள் ஏற்றுக்கொள்வாரார்களா? என்பதை அவர்களின் பார்வைக்கே விட்டுவிடுகிறேன்..
சினிமாவில் பெரிய ஹீரோ என்றால்: சினிமாவில் பெரிய ஹீரோவாக நடித்துவிட்டால் நாட்டில் அனைத்தையும் செய்துவிடார்கள் என்று மக்கள் கருதிவிட மாட்டார்கள். மக்கள் தங்களுக்கான பிரச்சனைக்கு யார் உடன் நிற்கிறார்கள், மக்களுக்காக யார் போராடுகிறார்கள்.. மக்களுக்கு யார் நல்லதை செய்கிறார்கள். என்ன திட்டங்கள், சட்டங்களை கொண்டு வருகிறார்கள் என்பதைத்தான் மக்கள் பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட மாநிலமாகத்தான் தமிழ்நாடு இருக்கிறது.
இப்படி பேசுகிறவர்களுக்கெல்லாம் மக்கள் எல்லாவற்றையும் வாரி கொடுத்துவிடுவார்கள் என்று கிடையாது. கூட்டணி மிக நேர்த்தியாக, மிக உறுதியாக, கொள்கையாக, நம்முடைய தலைவர் அவர்கள் உருவாக்கிய நாளிலிருந்து கூடிக்கொண்டுதான் இருக்கிறது.
திமுக கூட்டணி பலம்: 2018ல் உருவான கூட்டணி தொடர்ந்து 6 ஆண்டுகளாக வலிமையாக இருக்கிறது. ஆறு ஆண்டு காலத்திலும் சந்தித்த எல்லா தேர்தலிலும் திமுக கூட்டணியே வென்றிருக்கிறது. 2019 கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளை விட கூடுதலாக 2021 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில அரசியல் கட்சிகள் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. அதே போல, 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் கூடுதலாக சில கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

இவை எல்லாம் இந்த ஆட்சி நல்லாட்சி என்பதைத்தான் காட்டுகிறது. மாநில உரிமையை பாதுகாக்கிற ஆட்சி இது. எனவே, இந்த கூட்டணி கூடுதலாக இன்னும் வலிமை பெற்றுக்கொண்டுதான் வருகிறது. இது வலிமைமிக்க கூட்டணி.. இதை உடைக்கவேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். நடிகர் விஜய், விசிக தலைவர் திருமாவளவன் நூல் வெளியீட்டு விழாவுக்கு அழைத்து வராததால் வயிற்றெரிச்சலில் இப்படி பேசுகிறார். பொறாமையில், வயிற்றெரிச்சலில் பேசுவதற்கு நாங்கள் பொறுப்பு இல்லை.
முதலில் கவுன்சிலர் ஆகட்டும்: அரசியலே தெரியாதவர்களாக இவர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்று இப்போது தெரிகிறது. மக்களிடம் சென்று மக்களின் வாக்கைப் பெற்றுத்தான் ஆட்சிக்கு வர முடியும். விஜய் முதலில் தேர்தலில் நின்று மக்களை சந்தித்து, மக்களிடம் வாக்கை பெற்று ஒரு கவுன்சிலராகவாவது ஆகட்டும். அதன் பிறகு இதைப் பேசலாம்.
சமீபத்தில் பெரிய மழை வெள்ளம் வந்தது. மழையில் முதலமைச்சர் அனைவரையும் வீட்டில் இருந்து பணியாற்றும்படி (work from home) சொன்னார். ஆனால் நடிகர் விஜய் நலத்திட்டத்தையே work from home போல கொடுத்திருக்கிறார். இது எந்த ஊரிலாவது நடக்குமா? வெள்ளம் வந்த களத்திற்கே போகாதவர்கள் மக்களை சந்திக்காதவர்கள் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது " என்று காட்டமாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications