234 தொகுதிகளிலும் நடிகர் விஜய்யின் இரவு நேர பாடச்சாலை இன்று தொடக்கம்.. என்ன பெயர் தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளிலும் இரவு பாடச்சாலையை தொடங்கி வைக்கிறார் நடிகர் விஜய்.
காமராஜரின் 121 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இரவு பாடச்சாலைகளை தொடங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
அதற்காக 234 தொகுதிகளுக்கும் விஜய் மக்கள் நிர்வாகிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். அரசியலில் நுழையும் ஆசையில் விஜய் இருப்பதாக சொல்லப்படுகிறது. வரும் 2024 அல்லது 2026 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றம் , சட்டசபை தேர்தல்களுக்கு அவர் ஆயத்தமாகி வருகிறார் என்கிறார்கள்.

இந்த நிலையில் அம்பேத்கர் பிறந்தநாளின் போது 234 தொகுதிகளிலும் அவருடைய திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து 234 தொகுதிகளிலும் பட்டினி தினத்தையொட்டி மக்கள் வயிறார சாப்பிட மதிய உணவை அளிக்க சொன்னார்.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் நடந்து முடிந்த 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு கல்வி விருது நடந்தது. தமிழகம் முழுவதும் உள்ள சட்டபேரவை தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளை கவுரவிக்கும் விதமாக விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஜூன் மாதம் 17ஆம் தேதி நடந்து முடிந்தது.
இதில் 1600 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அவர் ஊக்கத்தொகையையும் சான்றிதழையும் வழங்கினார். இந்த நிலையில்தான் 234 தொகுதிகளிலும் இரவு நேர பாடச்சாலை அமைப்பதாக அறிவித்தார். அதை காமராஜர் பிறந்தநாளான இன்று தொடங்கி வைக்கிறார். இந்த பாடச்சாலைக்கு படிப்பகம், பயிலகம், கல்வியகம், அறிவொளியகம் என்ற பெயர்களில் ஒன்றை வைக்க விஜய் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால் ரசிகர்கள் தளபதி விஜய் பயிலகம் என வைக்க கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
அவர் தமிழகம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களின் ஆதரவும் வரவேற்பும் எப்படி இருக்கிறது என பார்க்க போவதாகவும் தெரிகிறது. 2026 இல் கோட்டையில் விஜய் என்ற போஸ்டர்களை இப்போதே அவரது ரசிகர்கள் அடிக்க ஆரம்பித்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications