நீதிமன்ற அனுமதிக்கு பின்.. அடுத்த வாரம் விஜய் கரூர் செல்கிறார்.. தவெக வட்டாரங்கள் சொல்வது என்ன
சென்னை: நீதிமன்றத்தில் முறையிட்டு அனுமதி பெற்ற பின்னர், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல் கூற இருக்கிறாராம். இதன்படி, தமிழக வெற்றிக்கழக தலைவரான விஜய், அடுத்த வாரம் கரூர் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும், அங்கு சென்று ஒவ்வொரு குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதுடன், கையோடு நிதியுதவியும் வழங்க இருக்கிறாராம். நீதிமன்றத்தில் அனுமதி பெறும் பணிக்கு விஜய் ஆயத்தமாகி வருவதாக சொல்லப்படுகிறது.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி கரூரில் சட்டசபை தேர்தலுக்கான பரப்புரை மேற்கொண்டார். அந்த நேரத்தில் விஜய்யை பார்ப்பதற்காக காலை முதல் காத்திருந்த ரசிகர்கள், இரவு 7 மணி அளவில் திடீர் கூட்ட நெரிசல் ஏற்பட்டு சிக்கி கொண்டார்கள். இந்த நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த துயர சம்பவம் தொடர்பாக த.வெ.க. கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார். தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், நிர்வாகி நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு வெளியிட்டதாக ஆதவ் அர்ஜூனா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், முன்ஜாமீன் கோரி புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
விபத்து நடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில், கரூர் மக்கள் சோகத்தில் தான் இருக்கிறார்கள். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கரூர் சென்று மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில், தலா ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டது. அதன்படியே பலருக்கும் நிதியுதவி அளிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
த.வெ.க. சார்பில் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று விஜய் அறிவித்திருந்தார். மேலும் வீடியோவில் பேசும் போது, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற கண்டிப்பாக நான் கரூர் வருவேன் என்று தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து அவர் எப்போது கரூர் செல்வார்? என்ற கேள்வி எழுந்து வருகிறது.. பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் சென்றது ஏன்? என்று மதுரை உயர்நீதிமன்றமும் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்ததது.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறவும், ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கவும் விஜய் அடுத்த வாரத்தில் கரூர் செல்ல முடிவு செய்திருக்கிறார். இதற்காக முறையாக நீதிமன்றத்தில் மனு செய்து, அனுமதி கேட்கப்பட உள்ளதாம். கோர்ட்டு அனுமதிக்கும் பட்சத்தில் விஜய் அடுத்த வாரத்தில் கரூர் செல்வார் என்று கூறப்படுகிறது. அதற்கான பணிகளை தவெக மேலிடம் செய்து வருகிறதாம்.












Click it and Unblock the Notifications