"வேற வழியே இல்லை.. விஜய் அனுபவிப்பாரு..'' திடீரென பொங்கிய நாம் தமிழர் சீமான்.. என்னாச்சு
சென்னை: நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை விரைவில் நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அதற்கான இடம் கிடைப்பதில் சிக்கல் நிலவுவதாகச் சமீபத்தில் செய்திகள் வெளியானது. இதற்கிடையே இது தொடர்பான கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சில பரபர பதில்களை அளித்துள்ளார்
சி.பா.ஆதித்தானரின் மூத்த மகனான மறைந்த ராமச்சந்திரா ஆதித்தனாரின் 90ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் வைக்கப்பட்டிருந்த அவரின் உருவப்படத்திற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சீமான்: அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீமானிடம் நடிகர்களுக்கு அரசியல் அறிவு கிடையாது என்று அமைச்சர் அன்பரசன் கூறியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த சீமான், "விஜய் பற்றித் தான் அவர் சொல்லிருக்க வேண்டும் என அவசியம் கிடையாது. உதயநிதியும் நடிகர் தான். உதயநிதி பற்றிக் கூடச் சொல்லி இருக்கலாம். அப்படி அரசியல்வாதிகளுக்கு அறிவு இல்லை என்றால் சரத்குமார், குஷ்பு, நெப்போலியன் உள்ளிட்டோரை ஏன் கட்சியில் சேர்த்துக் கொண்டார்கள். அறிவாலயத்திற்கு வந்தால் அறிவு வந்து விடுமோ..
திமுகவை அழிக்க இதுவரை ஒருவர் கூட பிறக்கவில்லை என்று சொல்லி வருகிறார்கள். பிறகு ஏன் பிறக்காத எதிரிகளைக் கண்டு கூட அச்சப்படுகிறார்கள். அதிகாரத்தில் இல்லாத சமயத்தில் இவர்கள் என்னவெல்லாம் பேசினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அது குறித்து எதுவும் பேசுவது இல்லை. ஏனென்றால் இவர்கள் சொன்னது எதையும் செய்யவில்லை.
கவலை இல்லை: எப்போது இவர்கள் வாக்குக்குக் காசு கொடுத்தார்களோ.. அப்போதே கொள்கை கோட்பாட்டு செத்துவிட்டது. மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா பேசும் கூட்டங்களில் கூட காசு கொடுத்தே கூட்டத்தைக் கூட்டினார்கள். எனக்கு வந்த 36 லட்சம் வாக்குகளில் 25 லட்சம் வாக்குகள் திமுகவில் இருந்து வந்தது. திமுகவில் இருந்த பிள்ளைகள் இப்போது என்னுடன் இருக்கிறார்கள். இப்போது தமிழ் புதல்வன் திட்டம் என்று சொல்லி இளைஞர்களை வாக்களிக்க வைக்க ஆண்டுக்கு ரூ. 18,000 லஞ்சம் தருகிறார்கள்.. இதெல்லாம் ஒரு திட்டமா?" எனக் கேள்வி எழுப்பினார்,
தொடர்ந்து பேசிய அவர், "அரசுப் பள்ளி கல்லூரிகள் நிலைமையைப் பாருங்கள்.. 300 பேர் படிக்கும் இடத்தில் கூட 2 கழிவறைகள் தான் இருக்கிறது. மேற்கூரை இல்லாத பள்ளிகளும் மர நிழலில் மாணவர்கள் இருக்கும் நிலை தான் இருக்கிறது. அரசுப் பள்ளிகள் நிலை இப்படி இருக்கும் போது கார் ரேஸ் தேவை தானா.. அதுக்கு கோடிக் கணக்கில் செலவு செய்கிறார்கள். காசு கொடுத்து கூட்டம் கூட்டும் நீங்களே நம்பிக்கையாக இருக்கும் போது, தானாகக் கூடும் கூட்டத்தை நான் ஏன் அஞ்சவேண்டும்.
உண்மைய சொல்லுங்க.. முருகனுக்கு மாநாடு நடத்துறீங்களா எனக்கு பயந்து நடத்துறீங்களா? சீமான் ஆவேச கேள்வி!
விஜய் மாநாடு: விஜய் தனது கட்சி மாநாடு நடந்த இடம் கிடைக்கவில்லை எனச் சொல்கிறார்கள். உண்மையில் தமிழ்நாட்டில் மாநாடு நடத்தும் அளவுக்கு இடம் எங்கும் இல்லை. திருச்சி, மதுரை ஊர்களில் மாநாடு நடத்தும் அளவுக்கு இடம் இல்லை. நாங்களே வேறு வழியில்லாமல் தான் ஜி கார்னரில் மாநாடு நடத்தினோம். தனியார் இடத்தில் காடு மண்டியிருந்தது. அதைச் சரி செய்து மாநாடு நடத்தினோம். இப்போது அதுபோலவே அவர் செய்ய வேண்டும்.
ஆனால் தனியார் இடம் என்றால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். நில உரிமையாளரை மிரட்டுவார்கள். இப்போதும் பாருங்கள்.. எந்தவொரு கல்லூரியிலும் என்ன பேச விட மாட்டார்கள். கூப்பிட்டாலும் உளவுத் துறை வரும் அவரை ஏன் கூப்பிடுகிறீர்கள்? அவர் என்னவெல்லாம் பேசுவார் தெரியுமா? எனச் சிக்கல் தருவார்கள். இப்படியெல்லாம் சொன்னால் யார் கூப்பிடுவார்கள்.
விஜய் அனுபவிப்பார்: இதுபோலத் தான் தனியார் இடம் என்றால் உரிமையாளரை மிரட்டுவார்கள். அதுபோன்ற நெருக்கடியை நான் அனுபவித்தேன். தம்பி விஜய்யும் அனுபவிப்பார். அதற்கு வேறு வழி கிடையாது" என்றார்.












Click it and Unblock the Notifications