இரவு நேர பாடசாலைகள்- அரதப் பழசான திராவிடர் இயக்க பார்முலா.. ஒர்க் அவுட் ஆகுமா நடிகர் விஜய் வியூகம்?
சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்னோட்டமாக 234 தொகுதிகளிலும் இரவு நேர பாடசாலைகளைத் தொடங்குகிறார் என்பது இப்போது பரபரப்பாக பேசபப்படுகிறது.
நடிகர் விஜய் பொதுவாக மேடைகளில் அதிகம் பேசாதவர். ஆனால் படங்களில் அரசியல் மாற்றங்கள் குறித்து அதிகம் பேசுகிறவர். இளையதளபதி எனும் பட்டத்தில் இருந்து இன்றைய சூப்பர் ஸ்டார் நோக்கி முன்னேறிவிட்டார். சூப்பர் ஸ்டார் நீயா? நானா? என ரஜினிகாந்துடன் பகிரங்கமாக மோதுகிறவர் நடிகர் விஜய்.

விஜய் மக்கள் இயக்கம் பொதுவான நிகழ்ச்சிகளை நடத்தி இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் எந்த ஒரு நிகழ்வை நடத்தினாலும் 234 தொகுதிகளையும் என கணக்குப் போட்டு, பகிரங்கமாக அறிவித்து செயல்படுத்துவதால் இயல்பாகவே விஜய் அரசியல் வியூகம் வகுக்கிறார் என்பது பேசுபொருளாகிவிடுகிறது. கடந்த மாதம் அனைத்து தொகுதி மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள்.. கடந்த சில நாட்களாக அனைத்து தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை.. இதனைத் தொகுதி அனைத்து தொகுதிகளிலும் இரவு நேர பாடசாலைகள் தொடக்கம்.. இவையெல்லாம் நடிகர் விஜய் அரசியல் நோக்கி நகருகிறார் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
இரவு நேர பாடசாலை என்பது அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் திராவிடர் இயக்கம் கடைபிடித்த அரசியல் பார்முலா. சலூன்களும் மக்கள் கூடும் சந்தைகளும் திராவிடர் இயக்க அரசியலின் ஆணிவேராக அடித்தளமாக அமைந்திருந்தன. இந்த வரிசையில் இரவு நேர பாடசாலைகளை அன்றைய திராவிடர் இயக்கமும் திமுகவும் முன்னெடுத்தது. வள்ளுவர் பாடசாலை, பெரியார் பாடசாலை, அண்ணா பாடசாலை என்பதெல்லாம் அன்றைய தமிழ்நாட்டின் அவசிய தேவைகளில் ஒன்றாகத்தான் இருந்தது. ஏனெனில் 2,000 ஆண்டுகாலம் கல்வி மறுக்கப்பட்ட பொது தமிழ்ச் சமூகம், திராவிடர் இயக்கத்தின் அரசியல் பாய்ச்சலின்போது முன்னர் இழந்த உரிமைகளை பெற்ற காலம்.. பாட்டனும் முப்பாட்டனும் படிக்காத போது அப்பாக்கள் படிக்க தொடங்கிய காலம்.. அம்மாக்கள் கல்வியை பற்றி பேசவும் சிந்திக்கவும் தொடங்கிய காலம்... அன்று தமிழ்ச் சமூகம் அறிவுத் தேடலில் ஆர்ப்பரித்து படையென கிளர்ந்தோடிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு ஆறுதல் கரங்களாக இரவுநேர பாடசாலைகள் இருந்தன. பின்னர் திராவிடர் இயக்க ஆட்சிகளில் கல்வி முறை செழுமைப்படுத்தப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டு எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வழிவகை செய்த போது இயல்பாகவே இதன் தேவைகள் குறைந்தன. ஆனால் ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் முழுமையாக முன்னேற்றம் அடைய, ஒடுக்குமுறைகளில் இருந்து விடுதலை பெற பின்னரும் இந்த இரவு நேர பாடசாலைகள் தேவைப்பட்டன. இதனை திராவிடர் இயக்கம் கையில் எடுக்காமல் இருந்த தருணத்தில் தலித்தியம் இப்பாடசாலைகளை பயன்படுத்திக் கொண்டது. இன்றளவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உற்றதுணையாக இந்த பாடசாலைகள் இருப்பதை மறுக்கவும் மறைக்கவும் முடியாது.
இன்னொரு பக்கம், மாணவர்களின் கல்வி கற்றல் முறையே தலைகீழாகிப் போய்விட்டது. இணைய உலகமும் செயலிகளும் கற்றல் முறையில் புதிய பாய்ச்சலைத் தந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு அரசு நடத்துகிற இல்லம் தேடி கல்வித் திட்டம், ஹோம் ஒர்க் செய்யக் கூடிய இடங்களாகத்தான் இருக்கின்றன. இப்படியான ஒரு சூழலில் இரவு நேர பாடசாலைகள் என்பது தேவையான ஒன்றா? என்கிற கேள்வி ஒருபுறம் எழாமல் இல்லை. ஆனால் தலித் இயக்கங்களுக்கு இரவு நேர பாடசாலைகள் ஒர்க் அவுட் ஆகிற போது ஏன் நடிகர் விஜய்க்கு இந்த வியூகம் கை கொடுக்காமல் போகும்? என்கிற கேள்வி மறுபுறம்.
திராவிட இயக்கங்கள் உருவான காலம், திராவிட சித்தாங்களை முழுமையாகவோ ஆகக் குறைந்தபட்சமோ பேசுகிற, பின்பற்றுகிற திராவிட கட்சிகள் இந்த மண்ணில் இன்னமும் இளமை குன்றாத அதே வாக்கு வங்கிகளுடன் கோலோச்சுகின்றன. இடதுசாரிகளும் தேசியவாதம் பேசுகிற காங்கிரஸும் திராவிட கட்சிகளை நம்பித்தான் இருக்கின்றன. இந்த திராவிடப் பெரும்பாறையில் இன்னொரு தேசியவாதம் பேசுகிற பாஜக முட்டி மோதி மோதி மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த களயதார்த்தம் புரிந்துபட்டதாலோ என்னவோ உச்சநடிகர்களே ஓரமாக அரசியலைவிட்டு ஒதுங்கி நிற்கின்றனர். இந்த நிலையில் இரவு நேர பாடசாலைகள், அடுத்த தலைமுறை வாக்காளர்கள், வாக்களிக்கும் உரிமை என்றெல்லாம் சித்தாந்தங்களுக்கு அப்பால் பேசி தமிழக அரசியலில் புதிய பார்முலாவுடன் நடிகர் விஜய் களமிறங்க வியூகம் வகுப்பது புரிகிறது. இது எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகி, ஆலமரங்களாக விழுதுகள் பல்லாயிரம் பரப்பி நிற்கும் ஜாம்பவான் கட்சிகளை பதம் பார்க்கும்? என்பது காலத்தின் கையில்!












Click it and Unblock the Notifications