உள்ளே தள்ளி கதவை சாத்தினாங்க! புடவையை உருவினாங்க! கையை கடிச்சிவிட்டு தப்பினேன்- நடிகை சார்மிளா பகீர்
சென்னை: மலையாள படத்தில் நடித்த போது பொள்ளாச்சியில் நடந்த ஷூட்டிங்கின் போது தயாரிப்பாளரும் அவருடைய 7 நண்பர்களும் என்னை பலாத்காரம் செய்ய முயன்றார்கள். அவர்களை கடித்துவிட்டு தப்பி ஓடி வந்து ஆட்டோ ஓட்டுநரின் உதவியுடன் போலீஸில் புகார் கொடுத்தேன் என நடிகை சார்மிளா பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சார்மிளா சன் நியூஸ் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பொதுவாக ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆனதுமே அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து பேச்சு எழும். அப்போது நான் நிறைய படங்களில் முடியாது என சொல்லிவிட்டு வெளியேறி இருக்கிறேன்.

காலம் மாறிப் போச்சு என்ற திரைப்படத்தின் ரீமேக் மலையாளத்தில் எடுக்கப்பட்டது. அந்த படத்தின் பெயர் அர்ஜுனன் பிள்ளையும் அஞ்சு மக்களும். அந்த படத்தில் நான் நடித்தேன். அந்த படத்திற்கு முன்பே என்னிடம் அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து பேசப்படவில்லை.
இந்த படத்தின் ஒரு பாடல் காட்சி எடுப்பதற்காக பொள்ளாச்சிக்கு சென்றோம். அந்த பாடல் முடிந்து பேக்கப் செய்யும் நாளில் தயாரிப்பாளரிடம் சொல்லிவிட்டு வருவதற்காக சென்றோம். அப்போது படத்தின் தயாரிப்பாளரும் அவருடைய 7 நண்பர்களும் மது அருந்திக் கொண்டிருந்தனர். நாங்கள் கிளம்பறோம் என சொன்னதும் முதலில் என் அசிஸ்டென்ட் அக்காவின் புடவையை உருவினார்கள். பிறகு என்னை பலாத்காரம் செய்ய முயற்சித்தார்கள்.
ஷூட்டிங் முடிந்ததும் இயக்குநர், தயாரிப்பாளர்கள் கிட்ட சொல்லிட்டு போறது வழக்கம். அப்படி சொல்லிட்டு கிளம்புறதுக்காக நானும் என்னோட பெண் உதவியாளர்களும் போனப்பதான் எங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்தார்கள். அப்போது நான் கையை கடித்துவிட்டு வெளியே ஓடி வந்தேன். அது பொள்ளாச்சி என்பதால் நான் வெளியே ஓடி போய் ஆட்டோ டிரைவர் கிட்ட போய் சொன்னதும், அவர் அவருடைய நண்பர்களுடன் வந்து என்னை காப்பாற்றினார்.
பிறகு என் அப்பாவுக்கு எஸ்டிடி பூத்தில் இருந்து போன் செய்து அவர் ராஜாத்தி அம்மாளிடம் சொல்லி பிறகு போலீஸ் வந்து அவங்களை பிடித்து சிறையில் வச்சாங்க. இப்படியெல்லாம் நாங்கள் கஷ்டப்பட்டிருக்கிறோம். எனக்கு கேரளாவில்தான் இது போன்ற பிரச்சினைகள் வந்துள்ளன. தமிழில் வந்ததில்லை. இந்த ஹேமா கமிட்டி அப்பவே இருந்திருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பாக இருந்திருக்கும்.
பெற்றோர் செல்வாக்கு இல்லாமல் சினிமாவுக்கு வரும் பெண்கள் அட்ஜெஸ்ட்மென்ட் என்ற விஷயத்தால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். மேலை நாடுகளில் பணம் சம்பாதித்துவிட்டு நடிகைகளுடன் படுக்கையை பகிர்வதற்காகவே சிலர் தயாரிப்பாளராகி படம் எடுக்கிறார்கள். இவர்களால்தான் எங்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது.
நான் அந்த தயாரிப்பாளரை போலீஸில் பிடித்துக் கொடுத்ததால் தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர், "நான் சரியாக ஷூட்டிங்கிற்கு வருவதில்லை. பேக்கப் செய்வதற்கு முன்பே வேறு படத்தில் ஒப்புக் கொள்கிறேன்" என்றெல்லாம் பரப்பிவிட்டதால் 6 மாதம் நான் எந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை.
அட்ஜெஸ்ட்மென்ட் கேட்டு நான் முடியாது என சொன்னதால் நான் 25 படங்களை இழந்துள்ளேன். கமிட்மென்ட், காம்பரமைஸ் என்ற வார்த்தைகளை அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு பயன்படுத்துவார்கள். தமிழில் எனக்கு இந்த மாதிரி பிரச்சினையே இல்லை. கேரளாவில்தான் அதிலும் நான் நடித்த படங்களில் இல்லை. என்னிடம் அட்ஜெஸ்ட்மென்ட் கேட்ட படங்களில் நான் நடிக்கவே இல்லை.
சில பெண்கள் அட்ஜெஸ்ட்மென்ட் கேட்டாலும் சமாளிப்பார்கள். அதாவது மாதவிடாய் என சொல்லி ஒரு 5 ,6 நாட்களை கடத்துவார்கள், பிறகு உடல்நிலை சரியில்லை என்பார்கள். அதற்குள் பாதி படம் முடிந்திருக்கும். அப்போது வந்து யாராவது அட்ஜெஸ்ட்மென்ட் கேட்டால் படத்தை பாதியிலேயே விட்டுவிடுவேன் என மிரட்டுவார்கள். இதனால் அவர்கள் பயந்துக் கொண்டு அமைதியாக இருந்துவிடுவார்கள். ஆனால் அடுத்த படத்தில் அந்த பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என சார்மிளா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications