விரைவில் உங்களை நம்ம ஊரில் சந்திக்கிறேன்.. வதந்தி பரவிய நிலையில் நடிகை திவ்யா ஸ்பந்தனா பதிவு
சென்னை: மாரடைப்பால் இறந்துவிட்டதாக வதந்தி பரவிய நிலையில் விரைவில் உங்களை எல்லாம் நம்ம ஊரில் (பெங்களூர்) சந்திக்கிறேன் என நடிகை திவ்யா ஸ்பந்தனா பதிவிட்டுள்ளார்.
நடிகர் சிலம்பரசன் நடித்த குத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா. அதனால் இவர் குத்து ரம்யா என அழைக்கப்பட்டு வருகிறார். இவர் கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

பொல்லாதவன், வாரணம் ஆயிரம் படங்களில் இவருடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. நடிப்பிலிருந்து விலகிய இவர் தனது இயற்பெயரான திவ்யா ஸ்பந்தனா என அழைக்க வேண்டும் என்றும் குத்து ரம்யா என தன்னை அழைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2013 ஆம் ஆண்டு கர்நாடகாவில் மாண்டியா தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து சமூகவலைதளங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் நடிகை ரம்யா மாரடைப்பால் இன்று உயிரிழந்துவிட்டதாக சமூகவலைதளங்களில் வதந்தி பரவியது.
இதையடுத்து அவருடைய மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவிக்க தொடங்கினர். இந்த நிலையில்தான் அந்த செய்தி வதந்தி என தெரியவந்தது. இதுகுறித்து நடிகை திவ்யாவிடம் பேசிய பெண் பத்திரிகையாளர் ஒருவர் திவ்யா நலமுடன் இருப்பதாகவும் அவர் பாரகுவேவுக்கு நாளை சென்றுவிட்டு பெங்களூருக்கு விரைவில் வருவார் என்றும் அவர் தெரிவித்ததாக பத்திரிகையாளர் சித்ரா தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

மேலும் சித்ராவும் திவ்யாவும் ஜெனீவாவில் உணவு உண்ணும் புகைப்படத்தை சித்ரா வெளியிட்டு, புத்திசாலித்தனம் நிறைந்த பெண்மணி திவ்யாவை சந்தித்ததில் மகிழ்ச்சி. பெங்களூர் குறித்த எங்கள் பாசம் உள்ளிட்ட நிறைய விஷயங்களை இருவரும் பேசிக் கொண்டோம் என்றார். இந்த ட்வீட்டிற்கு திவ்யா ஸ்பந்தனா பதில் அளிக்கையில் நம்ம ஊரில் உங்களை எல்லாம் விரைவில் சந்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அது போல் இன்று அதிகாலை கூட அதாவது அவரது இறப்பு செய்தி பரவுவதற்கு முன்பு கூட பாரத் , இந்தியா விவகாரத்தில் பெயரில் என்ன இருக்கிறது. அதை தவிர தீர்ப்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன என பதிவிட்டிருந்தார் திவ்யா ஸ்பந்தனா.












Click it and Unblock the Notifications