கட்டிப்பிடி வைத்தியம்.. டைனமிக் மேரேஜ்.. சினேகன் மீது நடிகை ஜெயலட்சுமி பகீர் குற்றச்சாட்டு
சென்னை: கட்டிப்பிடி வைத்தியம், டைனமிக் மேரேஜ் என கலாச்சாரத்தை சினேகன் சீரழிப்பதாக சீரியல் நடிகையும் பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி குற்றம்சாட்டியுள்ளனர்.
சீரியல் நடிகை ஜெயலட்சுமி, இவர் பாஜகவில் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முன்பு இணைந்தார். சினேகம் அறக்கட்டளையை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அவர் பாடி பகுதி மக்களால் அறியப்படுகிறார்.
இவர் கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட பாடி 90ஆவது வார்டில் போட்டியிட்டார். இந்த நிலையில் இவர் மீது நடிகரும் பாடலாசிரியருமான சினேகன் புகார் அளித்துள்ளார்.
திமுகவும் மக்கள் நீதி மய்யமும் தற்போது ஒன்று தான்..கமலை வம்புக்கு இழுக்கும் சீரியல் நடிகை ஜெயலட்சுமி
சினேகம் பவுண்டேஷன்
அந்த புகாரில் கடந்த 2015 ஆம் ஆண்டு சினேகம் பவுண்டேஷனை எனது சொந்த பணத்தில் நடத்தி வருகிறேன். இந்த அறக்கட்டளை மூலம் மக்களுக்கு தேவையான உதவிகளை நான் செய்து வருகிறேன். நான் இதற்கு முறையாக வருமான வரியையும் செலுத்தி வருகிறேன். அதற்கு என்னிடம் ஆதாரங்களும் உள்ளன.
சமூகவலைதளங்கள்
சமூகவலைதளங்களில் என்னுடைய பெயரை பயன்படுத்தி பணம் மோசடி செய்வதாக என் நண்பர்கள் எனக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மக்களிடம் பணம் வசூலித்து அறக்கட்டளை நடத்துகிறீர்களா என வருமான வரித் துறையினர் என்னை தொடர்பு கொண்டு கேட்டனர். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
நடிகை ஜெயலட்சுமி
பின்னர்தான் எனது அறக்கட்டளையின் பேரில் நடிகை ஜெயலட்சுமி பணம் வசூல் செய்தது தெரியவந்தது. அவர் மீது புகார் கொடுத்துள்ளேன் என்றார் சினேகன். இதை மறுத்த நடிகை ஜெயலட்சுமி கூறுகையில் நான் பல ஆண்டுகளாக சினேகம் அறக்கட்டளை நடத்தி வருகிறேன். இந்த அறக்கட்டளையில் நான் யாரிடமும் நிதி வாங்கவில்லை.
பணம் சம்பாதிக்கும்
நான் சம்பாதிக்கும் பணத்தை வைத்துதான் நான் ஏழைகளுக்கு உதவி செய்து வருகிறேன். சினேகம் என்ற பெயரில் அவர் பதிவு செய்திருந்தால் எனக்கு எப்படி அந்த பெயரில் அறக்கட்டளை தொடங்க பதிவு செய்வார்கள். இவரது அறக்கட்டளை சார்பில் மோசடி செய்வதாக இவரிடம் வருமான வரித்துறை போனில் கேட்டதாக கூறுவதெல்லாம் நடக்காத காரியம். மோசடி என்றால் சம்மன் அனுப்புவார்கள், போய் விளக்கம் அளிக்க வேண்டும். என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக புகார் கூறிய சினேகனை நான் சும்மாவிடமாட்டேன் என்றார் ஜெயலட்சுமி.
திருமண கலாச்சாரம்
இந்த நிலையில் ஜெயலட்சுமி தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் சினேகன் டைனமிக் மேரேஜ் எனப்படும் திருமண கலாச்சாரத்தை சீர்குலைக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு இதற்காக வெளிநாட்டிலிருந்து நிதி வருகிறது. கட்டிப்பிடி வைத்தியம் என்ற பெயரிலும் ஒருவனுக்கு ஒருத்தி எனப்படும் தமிழ் கலாச்சாரத்தை சிதைக்கிறார்.
சினேகன் மீது ஜெயலட்சுமி குற்றச்சாட்டு
அதாவது ஒரு திருமணத்தில் மணமகனை அங்குள்ள பெண்கள் கட்டிப்பிடிப்பார்கள். அது போல் மணமகளை அங்குள்ள ஆண்கள் கட்டிப்பிடிப்பார்கள். அவரது கலாச்சார சீர்கேடு குறித்து நிறைய புகார்கள் சமூகவலைதளங்களில் குறிப்பிடுகிறார்கள். பெண் என்றும் பாராமல் அநாகரீகமாக விமர்சித்துள்ளார். பெண்ணியம் பேசும் கமல்ஹாசன் சினேகனை எச்சரிக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.