தெலுங்கு பேசும் மக்கள் மீது அவதூறு பேச்சு! கஸ்தூரிக்கு முன்ஜாமீன் கிடைக்குமா? நவ.14ல் தீர்ப்பு
சென்னை: தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் நடிகை கஸ்தூரி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீதான இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வரும் 14ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது.
வன்கொடுமை தடுப்புச் சட்டம் போல பிராமணர்களைப் பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் கடந்த 3 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

கஸ்தூரியின் கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தனது பேச்சுக்கு கஸ்தூரி வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரினார். எனினும், கஸ்தூரியின் சர்ச்சை பேச்சு தொடர்பாக அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்பேரில் போலீசார் 4 சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கஸ்தூரியிடம் விசாரணை நடத்துவதற்கு எழும்பூர் போலீசார் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மனை வழங்க சென்னை போயஸ் கார்டனில் உள்ள கஸ்தூரி வீட்டுக்கு போலீசார் நேற்று சென்றனர். அப்போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது. இதையடுத்து தலைமறைவாகியிருக்கும் கஸ்தூரியை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில் இருக்கலாம் என்று சொல்லப்படுவதால் இது தொடர்பாகவும் விசாரணை நீடித்து வருகிறது. இதற்கிடையே மதுரை திருநகர் போலீசார் பதிவு செய்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் நடிகை கஸ்தூரி, மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், பிராமண சமுதாயத்தினர் சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று தெலுங்கு மக்கள் குறித்து பேசியதாக என்னை முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர், செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுக்கின்றனர்.
இதனால் தெலுங்கு மக்கள் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்தேன். இருந்த போதிலும், அரசியல் உள்நோக்கத்துடன் அளித்த புகாரின்பேரில் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது .எனவே தனக்கு முன் ஜாமீன் அளிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். கஸ்தூரி தாக்கல் செய்த மனு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நடிகை கஸ்தூரிக்கு முன்ஜாமீன் கொடுக்கக் கூடாது என தமிழக அரசு சார்பில் வாதம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நடிகை கஸ்தூரி பேசிய வீடியோ நீதிபதிக்கு போட்டு காண்பிக்கப்பட்டது. அப்போது அவரது வெறுப்பு பேச்சை கேட்ட நீதிபதி அதற்கு கண்டனம் தெரிவித்தார். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வரும் 14 ஆம் தேதி வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications