நடிகை ரோஜா திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. என்ன காரணம்?
சென்னை: ஆந்திர மாநிலத்தின் அமைச்சரும், பிரபல நடிகையுமான ரோஜா செல்வமணி (50 வயது), கால் வீக்கம் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பிரபல இயக்குனர் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் பிரசாந்திற்கு ஜோடியாக செம்பருத்தி படத்தில் 90களில் அறிமுகம் ஆனவர் நடிகை ரோஜா. அந்த படம் ஹிட் அடிக்கவே தமிழில் மிகப்பெரிய நடிகையாக உயர்ந்தார். தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்தார். தமிழில் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரோஜா, தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

தன்னுடைய முதல் பட இயக்குனரான ஆர்கே செல்வமணியை காதலித்து வந்த ரோஜா அவரை 2002ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
சினிமாவை தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர், தயாரிப்பாளராக வலம் வந்த ரோஜா, சினிமாவை தொடர்ந்து ஆந்திராவில் அரசியலிலும் களம் இறங்கினார்.
ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ரோஜா, நகரி தொகுதியில் 2014ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் தற்போது ஆந்திராவின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக உள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் ரோஜா செல்வமணி, நேற்று இரவு திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கால் வீக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications