சென்னை ஈசிஆரில் நடிகை ஸ்ரீதேவியின் சொத்தை அபகரிக்க முயற்சி.. ஐகோர்ட்டில் கணவர் போனி கபூர் வழக்கு
சென்னை: மறைந்த நடிகை ஸ்ரீதேவி சொத்துக்கு 3 பேர் உரிமை கோருவதாக, அவரது கணவர் போனி கபூர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். சென்னையில் உள்ள ஸ்ரீதேவியின் சொத்தை போலியான வாரிசு சான்றிதழ் பெற்று 3 பேர் உரிமை கோருவதாக தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் 4 வாரத்தில் தாம்பரம் போலீசார் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமாக சென்னை ஈசிஆரில் சொத்து உள்ளது. இந்த நிலையில் இந்த சொத்துக்கு 3 பேர் உரிமை கோருவதாக அவரது கணவர் போனி கபூர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தாம்பரம் போலீசாருக்கு உத்தரவு
சென்னையில் உள்ள ஸ்ரீதேவியின் சொத்தை போலியான வாரிசு சான்றிதழ் பெற்று 3 பேர் உரிமை கோருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார். இந்த மனுவை இன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர். தொடர்ந்து இது குறித்து 4 வாரத்தில் தாம்பரம் போலீசார் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
போனி கபூர் மனுவில் கூறியது என்ன?
ஸ்ரீதேவி கடந்த 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அந்த சொத்தை வாங்கியதாகவும், அன்று முதல், ஸ்ரீதேவி மற்றும் அவரது குடும்பத்தினர் அந்தச் சொத்தை முழுமையாகப் பயன்படுத்தி வருவதாக கணவர் போனி கபூர் தனது மனுவில் கூறியுள்ளார்.
மேலும், தற்போது அந்த சொத்து பண்ணை வீடாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்த நிலம், முதலில் முதலில் எம்.சி. சம்பந்த முதலியார் என்பவருக்குச் சொந்தமானதாக இருந்தது. அவருக்கு 3 மகன்கள், 2 மகள்கள் இருந்தனர். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே 1960 ஆம் ஆண்டு சொத்து பிரிவினை செய்யப்பட்டு 1960ல் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
திடீரென 3 பேர் உரிமை கோருகிறார்கள்
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான், ஸ்ரீதேவி சொத்தை வாங்கினார். விற்பனை பத்திரத்தையும் முறையாக பதிவு செய்து வைத்து இருந்தார். இந்த நிலையில், திடீரென்று 3 பேர் தங்களுக்கு இந்த சொத்தில் பங்கு இருப்பதாக கூறுகிறார்கள். அவர்கள் தாக்கல் செய்துள்ள வாரிசுரிமை சான்றிதழ் போலியானது எனவும், அதை ரத்து செய்ய வேண்டும் எனவும் போனி கபூர் தனது மனுவில் கோரியுள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி
தமிழ் திரையுலகில் 80 களில் கோலோச்சிய நடிகை ஸ்ரீ தேவி. பாலிவுட் திரையுலகிலும் சென்று இந்திய திரையுலகமே வியக்கும் அளவுக்கு திரையுலகில் உச்சம் தொட்டார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஸ்ரீதேவி திரையுலகில் கலக்கினார் . 1980-களின் தொடக்கத்தில் அவர் நடித்த இந்திப் படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்ற பெயரும் இவருக்கு கிடைத்தது.
போனி கபூருடன் திருமணம்
கமல், ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் என திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடித்துள்ள ஸ்ரீதேவி கடந்த 2018 ஆம் ஆண்டு உயிரிழந்தார். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர். பிரபல இந்தித் திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூர் -ஸ்ரீ தேவி தம்பதியருக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமாக சென்னை உள்ளிட்ட இடங்களில் சொத்துக்கள் உள்ளன.












Click it and Unblock the Notifications