ரயில் முன் தள்ளிவிட்டு மாணவி கொலை.. தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடியுங்கள்.. ஜிகே வாசன் சர்ச்சை பேச்சு
சென்னை: ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கல்லூரி மாணவி சத்யா கொலை செய்யப்பட்டதற்கு தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடிக்காததே காரணம் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: பாலியல் வன்முறையாக இருந்தாலும் ரயிலில் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமாக இருந்தாலும் தனி மனித ஒழுக்கம்தான் காரணம்.
தனிமனித ஒழுக்கம், கட்டுப்பாடு மிக அவசியமானது. அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. இதை மாணவர்களும் மாணவிகளும் கடைபிடிக்க வேண்டும். அதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.

காலக்கெடு
மேலும் தவறு செய்பவர்களை ஒரு காலக்கெடுவுக்குள் உடனடியாக தண்டிக்க வேண்டும் என ஜி கே வாசன் தெரிவித்துள்ளார். ஜிகே வாசனின் இந்த கருத்து மிகவும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தாங்கள் விரும்பினால் பெண்ணானவள் மறுப்பு தெரிவிக்காமல் ஏற்க வேண்டும் என சில ஆணாதிக்க சக்திகள் இருப்பது குறித்து பெண்ணியவாதிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

விருப்பம்
விருப்பம் இல்லாவிட்டாலும் தன்னை விரும்பித்தான் ஆக வேண்டும் என சில ஆண்கள், பெண்கள் மீது தங்கள் கருத்துகளை திணிக்கிறார்கள். இது போன்ற ஆணாதிக்கத்தின் விருப்பங்கள் நிறைவேறாத போது கொலை செய்தல், கடத்தி செல்லுதல், ஆசிட் ஊற்றுவது, கூட்டு பலாத்காரம் செய்து பழிவாங்குதல் உள்ளிட்ட கொடூரமான செயல்களில் இறங்குகிறார்கள். இதை மாற்ற உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஆதம்பாக்கம்
சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் மாணிக்கம்- வரலட்சுமி. இவர்களது மகள் சத்யா (20). இவர் திநகர் கல்லூரியில் படித்து வந்தார். இவர் பள்ளி பருவத்தில் காதல் செய்த சதீஷ் என்ற இளைஞர், கஞ்சா பழக்கத்திற்கு அடிமை என்பதால் அந்த காதலை சத்யா முறித்துக் கொண்டார். அண்மையில் சத்யாவுக்கு அவரது உறவினருடன் நிச்சயதார்த்தம் நடந்தது குறித்து அறிந்த சதீஷ், சத்யாவிடம் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு போய், நாம் எங்காவது போய்விடலாம், என்னுடன் வந்துவிடு என கூறியுள்ளார்.

ஆதம்பாக்கம் சத்யா
இதற்கு சத்யா மறுத்த போது ஆத்திரமடைந்த சதீஷ் தண்டவாளத்தில் பிடித்து தள்ளிய போது தாம்பரம் வந்த ரயில் மோதியதில் சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சத்யாவின் இறப்பை அறிந்த அவரது தந்தை மாணிக்கம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சத்யாவின் தாய் வரலட்சுமி புற்றுநோயுடன் போராடி வருகிறார். சத்யாவுடன் பிறந்தவர்கள் இன்னும் இரு சகோதரிகள் இருக்கிறார்கள். இப்படி ஆணாதிக்கத்தால் ஒரு குடும்பமே சிதைந்துள்ளது என்பதை யாராலும் மறுக்கவே முடியாது.












Click it and Unblock the Notifications