சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு: 5 ஆம் தேதி கூடுதல் டோக்கன்.. தமிழக அரசு குட் நியூஸ்
சென்னை: பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கார்த்திகை மாதத்தின் சுபமுகூர்த்த தினத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 5 ஆம் தேதி சுபமுகூர்த்த தினத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லா நல்ல காரியங்களையும் பெரும்பாலானோர் சுபமுகூர்த்த தினங்களில் தான் தொடங்குவார்கள். புதிதாக இடம் வாங்கும் போது பத்திரப்பதிவையும் இது போன்ற சுபமுகூர்த்த தினங்களில் வைக்கவே ஆசைப்படுகின்றனர். இதன் காரணமாகவே மற்ற நாட்களைவிட சுபமுகூர்த்த தினங்களில் சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் பத்திரப்பதிவுகள் நடைபெறும்.

அந்த வகையில் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வியாழக்கிழமை இந்த மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினம் என்பதால் அதிகம்பேர் பத்திரப்பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளனர். எனவே அன்றைய தினம் கூடுதல் டோக்கன்கள் வழங்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில் தான் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி அன்று கூடுதல் டோக்கன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பதிவுத்துறை தலைவர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:-
சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்வது வழக்கம். தற்போது கார்த்திகை மாதத்தின் சுபமுகூர்த்த தினமான 05.12.2024 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
இதனை ஏற்று கார்த்திகை மாதத்தின் சுபமுகூர்த்த தினமான 05.12.2024 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications