60 வயசுக்கு பிறகு நாமும் பொதுமக்கள்தான்.. போலீஸ் இல்லை.. காவலர்களுக்கு ஏடிஜிபி அட்வைஸ்
சென்னை: 60 வயசுக்கு பிறகு நாமும் பொதுமக்கள்தான். எனவே பொதுமக்களை எந்த காவலர்களும் அடிக்கக் கூடாது, துன்புறுத்தக் கூடாது என கூடுதல் டிஜிபி எம் ரவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூடுதல் டிஜிபி எம் ரவி ஒரு வீடியோவில் கூறுகையில், காவல்துறையினர் அடித்து கொன்றனர் என கூறி நிறைய வீடியோக்களை எனக்கு அனுப்பி இது என்ன சார் என நிறைய பேர் கேட்கிறார்கள். காவல்துறையினர் பொதுமக்களை அடிக்கக் கூடாது.
நான் 4 மாவட்டங்களில் ஏழரை ஆண்டுகள் மாவட்ட எஸ்பியாக பணியாற்றியுள்ளேன். அடிப்பதனால் எந்தவிதமான பயனும் இல்லை. அடிப்பதனால் ஒரு குற்றவாளியிடமிருந்தும் உண்மையை வரவழைக்க முடியாது. அடிப்பதால் நிரபராதிதான் நான் குற்றவாளி என்பதை ஒப்புக் கொள்வான்.

விசாரணை
விஞ்ஞான ரீதியிலான விசாரணையின் பேரில் நாம் குற்றங்களை கண்டுபிடிக்க வேண்டும். இந்த ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் ஊரடங்கை மீறினால் அவர்களிடம் அன்பாக பேசி திருந்தும் வகையில் அவர்களிடம் சொல்ல வேண்டும். அதைவிட்டு விட்டு அவர்களிடம் நாம் ஆக்ரோஷமாக பேசுவது, அவர்களை அடிப்பது போன்ற நிகழ்வுகளை நடத்தக் கூடாது. தற்காலத்தில் இது போன்ற முறைகள் சரியாக இருக்காது.

ஒட்டுமொத்த காவல்
ஒரு சில காவல் துறையினர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் ஒட்டுமொத்த காவல் துறைக்கும் கெட்ட பெயர் ஆகிவிடுகிறது. எனவே காவல் துறையினர் பொதுமக்களின் நண்பன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நமது டிஜிபி அலுவலகத்தில் காந்திஜியின் புகைப்படம் வைத்து அதன் கீழே ஒரு வாசகம் எழுதியுள்ளது.

இருமாப்பு வேண்டாம்
அதில் பொதுமக்கள் நம்முடைய எஜமானர்கள். நாம் அவர்களுடைய ஊழியர்கள், சேவகர்கள் என எழுதியுள்ளது. இந்த சீருடை அணிவதே பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான். இந்த சீருடையை நான் ஒரு ஐபிஎஸ் அதிகாரி, நான் ஒரு சப் இன்ஸ்பெக்டர், நான் ஒரு காவலர் என இருமாப்போடும் கர்வத்துடன் இந்த உடையை நாம் அணியவில்லை.

பொறுமை
பொதுமக்கள் நம்மை திட்டினால் கூட நாம் பொறுமையாக இருக்க வேண்டும். பொதுமக்களில் ஒருவரை நாம் அடிக்கும் போது அவர்களில் ஓராயிரம் பேர் நமக்கு எதிரியாகிறார்கள் என்பது மறந்துவிடக் கூடாது. காவல்துறையில் நாம் 59 வயசு வரை இருப்போம், 62 வயசு வரை இருப்போம், 60 வயது வரை இருப்போம், அதன் பின்னர் நாமும் பொதுமக்களாக தான் உருவாகிறோம்.
கோபம்
அப்போது நாமும் இது போன்ற நிகழ்ச்சிக்குள்ளாகிவிடுவோம். எனவே காவல்துறையினர் பொதுமக்களிடம் அன்புடனும் மரியாதையுடனும் பழக வேண்டும். இதைதான் நாம் பயிற்சியிலும் கற்றுக் கொள்கிறோம். ஒரு கூட்டத்தில் நம்மை ஒருவர் திட்டுவார், அசிங்கமாக திட்டுவார். அந்த சமயத்திலும் நாம் பொறுமை காக்க வேண்டும். நம்மிடம் எந்தவிதமான கோபமும் இருக்கக் கூடாது. பொறுமையுடன் இருக்க வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications