த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசிய வழக்கு.. மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசிய வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் நடிகை த்ரிஷா குறித்து, நடிகர் மன்சூர் அலிகான் பேசியிருந்த கருத்துக்கள் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளன. அவரது பேச்சுக்கள் அருவருக்கத்தக்கதாக இருப்பதாக கூறியுள்ள த்ரிஷா, இவரை போன்றவர்களால்தான் மனித குலத்துக்கே அவப்பெயர் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து x சோஷியல் மீடியாவில் "நடிகர் மன்சூர் அலிகான் என்னை பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோவை பார்த்தேன். பாலியல் ரீதியாகவும், மரியாதைக்குறைவாக மற்றும் கேவலமான எண்ணத்துடன் பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். என்னுடன் நடிக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து ஆசைப்படலாம். இதுவரை அவருடன் சேர்ந்து நடித்ததில்லை என்பதில் நிம்மதியடைகிறேன். இனியும் சேர்ந்து நடிக்கமாட்டேன். இவரைப்போன்றவர்கள் மனிதக்குலத்திற்கே அவப்பெயரை ஏற்படுத்துகிறார்கள்" என்று த்ரிஷா பதிவிட்டிருந்தார்.
இந்த விவகாரம் சினிமா வட்டத்தை தாண்டி அரசியல் தளத்திலும் எதிரொலித்தது. பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், "நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் அருவருக்கத்தக்க வகையில் பேசியிருக்கிறார். சுயவிளம்பரத்திற்காக இது போன்று செயல்படும் நபர்களை வன்மையாக கண்டிக்கிறேன். அவர் மீது காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார். தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜனும் த்ரிஷாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியிருந்தார்.
அதேபோல இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என அதன் உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கூறியிருந்தார். அதேபோல மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து பெண்களை இழிவுபடுத்தி பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது மன்சூர் அலிகான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே அவ்வாறு பேசவில்லை என கூறினார்.
மேலும், இது தொடர்பாக நடிகை த்ரிஷா சார்பில் எந்த புகாரும் அளிக்கப்படாத நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையிலேயே வழக்கு பதிவு செயப்பட்டுள்ளதாக கூறினார். காவல்துறை சார்பில் மாநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன் ஆஜராகி, மன்சூர் அலிகானின் பேச்சு குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்.
இதனையடுத்து, இந்த முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று மதியம் வரும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் நீதிபதி தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதனையடுத்து மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்து தற்போது தீர்ப்பளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications