அல்லோகலப்படும் அரசியல்.. நிருபர்களிடம் வாயே திறக்காமல் கடந்துபோன அண்ணாமலை.. அந்த ரியாக்சனை பாருங்க!
சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக இடையேயான கூட்டணி முறிந்துள்ளது. இந்நிலையில் தான் டெல்லியில் பாஜக மேலிட தலைவர்களை அண்ணாமலை சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து விளக்கிய நிலையில் இன்று சென்னை திரும்பிய நிலையில் அவர் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தாமல் கையெடுத்து கும்பிட்டு கடந்து போனார்.
தமிழகத்தில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணியில் இருந்தன. இருப்பினும் அவ்வப்போது அதிமுக தலைவர்களுக்கும், பாஜக மாநில அண்ணாமலைக்கும் இடையே கருத்து மோதல்கள் என்பது ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் தான் சமீபத்தில் அண்ணாமலை, மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார்.
அதன்பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் கூட்டணியில் இருந்து விலகிய அதிமுகவை மீண்டும் சேர்க்க பாஜக முயன்று வருவதாக கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில் தமிழகத்தில் அதிமுக உடனான கூட்டணி முறிவுக்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு தான் காரணம் என கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலை அவசரமாக டெல்லி சென்றார். பாஜக மேலிடம் அழைத்ததன் பேரில் அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் அண்ணாமலை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.
இந்த வேளையில் தமிழக அரசியல் நிலவரம், அதிமுக-பாஜக கூட்டணி முறிவு குறித்த விபரங்கள் பற்றி அவர்கள் விவாதித்தனர். மேலும் மேலிட தலைவர்களின் கேள்விகளுக்கு அண்ணாமலை பதிலளித்தார். அதோடு எதிர்கால திட்டங்கள் பற்றியும் அவர் விவரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் அதிமுகவுடனான கூட்டணி முறிவு குறித்து டெல்லியில் பாஜகவின் தேசிய தலைவர்களிடம் விளக்கம் அளித்த பிறகு இன்று இரவு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை திரும்பினார்.
சென்னை திரும்பிய அண்ணாமலைக்கு நிர்வாகிகள் சிலர் ஒற்றை பூவை கொடுத்து வரவேற்றனர். சிலர் அவருக்கு பூ கொடுத்து வரவேற்று செல்பி எடுத்தனர். மேலும் அண்ணாமலை வருகையை முன்கூட்டியே அறிந்திருந்த பத்திரிகையாளர்கள் மைக்கை தயாராக வைத்திருந்தனர்.
பாஜக மேலிட தலைவர்கள் உடனான சந்திப்பு குறித்து கேட்க பத்திரிகையாளர்கள் தயாராக இருந்தனர். இந்த வேளையில் சென்னை வந்திறங்கிய அண்ணாமலை பத்திரிகையாளர்கள் சந்திக்காமல் மைக் வைத்திருந்த பகுதியை அடைந்தபோது கையெடுத்து கும்பிட்டுவிட்டு கடந்து சென்றார். பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தவில்லை. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications