திமுக கையில் பாவ பணம்.. "வெட்கக்கேடானது!" லாட்டரி மார்ட்டினிடம் நன்கொடை- எடப்பாடி பழனிசாமி தாக்கு
சென்னை: தேர்தல் பத்திரம் மூலம் பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் திமுகவுக்கு ரூ.656.5 கோடி நன்கொடையாக அளித்துள்ள தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் அவை சட்டவிரோதமானது என்ற உச்ச நீதிமன்றம் இந்த முறையில் நன்கொடை பெறுவதைத் தடை செய்தது. மேலும், 2019 முதல் நன்கொடை விவரங்களையும் வெளியிட உத்தரவிட்டது.

அதன்படி தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை எஸ்பிஐ தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. தேர்தல் ஆணையமும் இந்த தகவல்களை இணையத்தில் வெளியிட்டது. இன்று சில கூடுதல் தகவல்களும் வெளியானது.
நன்கொடை: இதில் திமுக மொத்தம் ரூ.656.5 கோடி நன்கொடை பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. அதில் ரூ.509 கோடியை ஃப்யூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிஆர் நிறுவனம் வழங்கியுள்ளது. இது வேறு எந்த நிறுவனமும் இல்லை பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனம் தான். தேர்தல் பத்திரங்களை அதிகம் வாங்கிய நிறுவனமாகவும் லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
திமுக லாட்டரி மார்ட்டினிடம் இருந்து இத்தனை கோடியைப் பெற்றது பெரிய சர்ச்சையானது. இணையத்தில் பலரும் இதைக் குறிப்பிட்டு விமர்சித்து வருகிறார்கள். இதற்கிடையே இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி திமுகவைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி: இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், "லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் FUTURE GAMINGS என்ற நிறுவனத்திடம் 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக திமுக பெற்றுள்ளது இன்று அம்பலமாகியுள்ளது. சூதாட்டங்களால் உயிர்கள் பறிபோவதைத் தடுக்கும் சீரிய நோக்குடன் எம்ஜிஆர் ஆட்சியில் குலுக்கல் சீட்டும், ஜெயலலிதா ஆட்சியில் லாட்டரி சீட்டும், எனது தலைமையிலான கழக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டமும் தடைசெய்யப்பட்டது.
ஆனால், நிர்வாகத் திறனற்ற விடியா ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்து பெயரளவில் மட்டும் நடவடிக்கைகள் எடுப்பதுபோல காட்டிவிட்டு, வலுவில்லாத சட்டத்தை இயற்றி , மறுபுறம் மக்களின் உயிரையே பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது. மக்களின் உழைப்பைச் சுரண்டி உயிரைக் குடிக்கும் பாவ பணத்தைப் பெற்றிருக்கும் திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் உரியப் பாடம் புகட்டுவார்கள்" என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு அரசியல் கட்சிகள்: தமிழகத்தைப் பொறுத்தவரை இங்கே உள்ள திமுக, அதிமுக என இரு கட்சிகள் மட்டுமே தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெற்றுள்ளது. அதில் அதிகபட்சமாக திமுக ரூ.639 கோடி நன்கொடை பெற்றுள்ள நிலையில், அதிமுக வெறும் ரூ.6.05 கோடி மட்டுமே தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் வழக்கு: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு நாளை மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. தேர்தல் ஆணையம் முன்பு வெளியிட்ட டேட்டாவில் தேர்தல் பத்திரங்களின் எண் இல்லை. எனவே, அதை வெளியிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications