விட்டுக்கொடுக்க வேண்டும்... ஈகை புரிய வேண்டும்... ஓ.பி.எஸ். -இ.பி.எஸ். கூட்டாக பக்ரீத் வாழ்த்து..!
சென்னை: இஸ்லாமியர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நபிகள் நாயகத்தின் போதனைகளை மனதில் தாங்கி வாழ்ந்தால் அமைதியும், வளமும் பெருகும் என அவர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் இருவரும் இணைந்து விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில்;
''இஸ்லாமிய பெருமக்களுக்கு எங்களது உளங்கனிந்த பக்ரீத் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். இறைவனின் விருப்பத்திற்கு கீழ்படிந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை நெறி என்று உலகிற்கு பறைசாற்றும் பொன்னாள் இந்நாளாகும்.
இறைத்தூதர் இப்ராஹீம் அவர்களின் தன்னலமற்ற தியாகத்தினை உலகுக்கு உணர்த்தும் உன்னத நாள் பக்ரீத் திருநாளாகும்.
தியாகத் திருநாளில் பசித்தவருக்கு உணவளியுங்கள்; துன்பப்படுபவர்களுக்கு உதவி புரியுங்கள்; அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள்; எளியவர்களிடம் கருணை காட்டுங்கள்; சிந்தனையிலும் நடத்தையிலும் தூய்மை உடையவராக இருங்கள்; என்ற நபிகள் நாயகத்தின் போதனைகளை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி வாழ்ந்தால் உலகில் அமைதி நிலவி வளம் பெருகும்.
விட்டுக்கொடுத்தலும், ஈகை புரிதலும், மத நல்லிணக்கமும், மனிதநேயமும் தழைத்தோங்க வேண்டும். அனைவர் வாழ்விலும் நலமும், வளமும் பெருகிட வேண்டும் என்ற எங்களுடைய விருப்பத்தை தெரிவித்து இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் வழியில் எங்கள் பக்ரீத் நல் வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரிதாக்கிக் கொள்கிறோம்.''












Click it and Unblock the Notifications