ஒரே பால்.. 3 சிக்சர்! ’நீட்’ குறித்த பேச்சால் ஸ்கோர் செய்த விஜய்! திமுக, அதிமுக, காங்கிரஸ் வரவேற்பு!
சென்னை: நீட் தேர்வால், ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எல்லாருமே ரொம்பவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் சத்தியமான ஒரு உண்மை எனவும், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தவெக தலைவர் விஜய் கூறியுள்ள நிலையில், அவரது கருத்தை திமுக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடிகர் விஜய் இரண்டாம் கட்ட கல்வி விருதுகளை இன்று வழங்கி வருகிறார். இதற்காக திருவான்மியூரில் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு அதிகாலையே விஜய் வருகை தந்தார்.

நிகழ்ச்சியில் செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், உள்ளிட்ட 19 மாவட்டங்களைச் சேர்ந்த 725 மாணவர்கள் உட்பட 3,500 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்கிக் விஜய் கவுரவிக்க உள்ளார்.
இதனையடுத்து திட்டமிட்டப்படி 10 மணிக்கு வந்த விஜய்க்கு மாணவ, மாணவிகள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்துக்கு பிறகு நிகழ்ச்சியில் பேசிய விஜய்," நீட் தேர்வால், ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட , தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எல்லாருமே ரொம்பவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் ஒரு சத்தியமான ஒரு உண்மை. இந்த நீட் பற்றி ஒரு பிரச்சனையா நான் பார்க்கிறது என்ன என்றால் நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானதாக உள்ளது.
1975க்கு முன்னால் கல்வி மாநில பட்டியலில் தான் இருந்தது. உங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான் அது.. ஒன்றிய அரசு வந்ததுக்கு அப்புறம் அது பொது பட்டியல் சேர்த்தாங்க.. எனக்கு தெரிஞ்ச அதுதான் முதல் பிரச்சினை. இரண்டாவது, ஒரே நாடு ஒரே பாடத் திட்டங்கள் ஒரே தேர்வு இது அடிப்படையாகவே கல்வி கற்கும் நோக்கத்திற்கே ஒரு எதிரான ஒரு விஷயமாக நான் பார்க்கிறேன்.,
ஒவ்வொரு மாநிலத்துக்கு ஏற்ற மாதிரி அந்த பாடத்திட்டங்கள் இருக்கணும்.. இதை நான் மாநில உரிமைகளுக்காக மட்டுமே கேட்கவில்லை..அந்த கல்வி முறைல பல்வேறு கண்ணோட்டங்கள் பல்வேறு பார்வைகள் உள்ளது. பன்முகத்தன்மை என்பது அது ஒரு பலமே தவிர பலவீனம்னு சொல்ல முடியாது. இன்னொரு ஒரு முக்கியமான ஒரு விஷயம்.. மாநில மொழியில் படிச்சிட்டு ஸ்டேட் சிலபஸ்ல படிச்சிட்டு.. என்சிஇஆர்டி சிலபஸ்ல வந்து தேர்வு வச்சா அது எப்படி?
மே மாதம் நடந்த நீட் தேர்வில் குளறுபடிகள் காரணமாக.. அந்த தேர்வு காரணமாக நம்பகத் தன்மையே போய்விட்டது.. இதற்கு நீட் விலக்கு தான் தீர்வு.. இதற்காக தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை நான் மனதார வரவேற்கிறேன்.கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும்.. இல்லையேல் சிறப்பு பொது பட்டியலை உருவாக்கி அதுல கல்வி மற்றும் சுகாதாரத்தை அதுல சேர்க்கணும்" என்றார்.
இந்நிலையில், நடிகர் விஜயின் கருத்துக்கு திமுக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக பேசிய திமுக அமைப்பு செயலாளரான ஆர்எஸ் பாரதி,"இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிராக பேசி வருகின்றன. நடிகர் விஜய் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை ஆதரிப்பதாக தெரிவித்திருக்கிறார். விஜயின் கருத்து வரவேற்கத்தக்கது. நீட்டுக்கு எதிரான தீர்மானத்தை ஒட்டுமொத்த தமிழர்களும் ஆதரிக்கின்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்ற விஜயின் கருத்து வரவேற்கத்தக்கது. நீட் தேர்வுக்கு எதிராக ஒரு காலத்தில் திமுக மட்டும் பேசிக் கொண்டிருந்தது. இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிராக பேசி வருகின்றன" என்றார்.
இதே போல அதிமுக தரப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,"நடிகர் விஜயின் நீட் தேர்வு குறித்த கருத்து வரவேற்கத்தக்கது. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற கருத்து அதற்காக விஜய் குரல் கொடுத்ததும் வரவேற்கத்தக்கதே. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதும் அதிமுகவின் நிலைப்பாடு " கூறியுள்ளார்.
இதேபோல நடிகர் விஜய்யின் கருத்தை வரவேற்று பேசியிருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும் எம்எல்ஏவும் ஆன செல்வபெருந்தகை. இது தொடர்பாக பேசிய அவர்," நீட் விலக்கு குறித்து விஜய் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. மேலும் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற விஜயின் கருத்தை பாராட்டுகிறோம்.. அவரது கருத்தை வரவேற்கிறோம்" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications