அண்ணாவை வைத்து செக்.. அண்ணாமலைக்கா அல்லது அமித்ஷாவுக்கா? எடப்பாடியின் திட்டம் என்ன?
சென்னை: அண்ணாவை வைத்து அண்ணாமலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செக் வைத்திருப்பதாக அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். டெல்லி சென்று திரும்பிய பிறகு எடப்பாடியின் நகர்வுகள் அப்படியே மாறி இருப்பதாக சொல்கிறார்கள்.
அண்மை காலமாக திமுகவை கடுமையாக எதிர்க்கும் கட்சி என்றால் பாஜக தான் என்கிற அளவில் அண்ணாமலையின் விமர்சனங்களும், பாஜகவின் செயல்பாடுகளும் இருந்தன. அதிமுகவை விட ஒவ்வொரு விஷயத்திலும் திமுகவிற்கு எதிராக பாஜக அரசியல் செய்தது.

எங்கு என்ன பிரச்சனை என்றாலும், அதன் பின்னணியை ஆராயும் பாஜக, திமுகவை விமர்சிப்பதை தொடர்ந்து வந்தது. அதேநேரம் அதிமுக எதிர்ப்புகள் என்பது, மிக முக்கியமான விஷயங்களுக்கு மட்டுமே என்கிற நிலை இருந்து வருகிறது.இதனால் பாஜகதான் அதிமுகவைவிட திமுகவை எதிர்ப்பது போன்ற தோற்றமும் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் அண்மையில் டெல்லி சென்றார் எடப்பாடி பழனிசாமி. அங்கு அமித்ஷாவை சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனைகள் நடந்து கொண்டிருந்தது.அப்போது பாஜக தரப்பில் எடப்பாடியிடம் 20 சீட் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எடப்பாடி பழனிசாமி மறுத்து விட்டாராம்.
டெல்லியில் இருந்து திரும்பி வந்த எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலையின் செயல்பாடுகளால் கடும் அதிருப்தி அடைந்தாராம். அண்மையில் அண்ணா விவகாரத்தில் அண்ணாமலையின் பேச்சுக்கு திமுகவே பெரிய எதிர்வினை காட்டவில்லை. ஆனால் அதிமுக கடும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தியது. ஏற்கனவே தன்னை முன்னிலைப்படுத்திய செயல்படுவதாக அண்ணாமலை மீது அதிமுகவினர் அதிருப்தியில் இருந்த நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தை விமர்சிக்க தொடங்கினர்.

அண்ணாமலை அண்ணா குறித்து பேசிய உடனே முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, சிவி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கடும் விமர்சனங்களை வைத்தனர்.இதை தொடர்ந்து அதிமுகவின் பல்வேறு நிர்வாகிகளும், பாஜகவை கூட்டணியில் இருந்து கழட்டி விட வேண்டும் என்று ஆவேசமாக ட்விட்டரில் பதிவிட தொடங்கினர்.
இதனிடையே ஜெயகுமார் நேற்று பேட்டி அளித்த போது, பாஜக வேஸ்ட் லக்கேஜ் என்று கூறியதுடன், இனி பாஜக உடன் கூட்டணி இல்லை என்றும் தேர்தல் நேரத்தில் தான் இனி கூட்டணியை கட்சி தலைமை முடிவு செய்யும் என்று அறிவித்தார். இதனிடையே அண்ணாமலையின் செயல்பாடுகளை எஸ்பி வேலுமணியும் இன்று கண்டித்துள்ளார்.
இந்த விவகாரத்தை அறிவிக்க வேண்டியவர் எடப்பாடி பழனிசாமி, ஆனால் ஜெயக்குமாரை வைத்து எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பதற்கு காரணம் அண்ணாமலையின் மீதான அதிருப்பதி தான் காரணம் என்கிறார்கள். அதேநேரம் அண்ணாமலைக்கான அறிவிப்பாக இல்லாமல் பாஜகவின் மேலிடத்துக்கான அறிவிப்பாகவும் பார்க்க வேண்டும் என்கிறார்கள் மூத்த பத்திரிக்கையாளர்கள். .
தமிழகத்தில் பாஜக உடன் கூட்டணி தொடர வேண்டும் என்றால் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று அதிமுக நினைக்கிறதாம். ஆனாலும் அமித் ஷா மற்றும் நட்டாவுக்கும் கூட்டணி தொகுதி பேர விவகாரத்தில் கறார் கட்டவும் இந்த நடவடிக்கை என்று சொல்கிறார்கள்.
அதாவது, கேட்கும் தொகுதிகளை கொடுக்க முடியாது என்பதையும் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் போன்றோரை கூட்டணியில் சேர்க்க முடியாது என்பதை வெளிப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.
அதேநேரம் கூட்டணி இல்லை என்று அதிமுக அறிவித்த உடனயே, எடப்பாடி பழனிசாமியை பாஜகவினர் இதுவரை இல்லாத அளவிற்கு மோசமாக விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.

பாஜகவின் மாநில விளையட்டு மற்றும் திறன் வளர்ப்பு பிரிவின் தலைவர் அமர்பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில், "வளைந்து, குனிந்து டேபிள் சேருக்குள் புகுந்துச் சென்று, முதல்வர் பதவிக்கு வந்தது தான் தகுதியா? அப்படி யாரிடமும் குனிந்து, வளைந்து கும்பிடு போட்டு பதவிக்கு வராதவர் எங்கள் தலைவர் அண்ணாமலை. அது தான் எங்கள் தலைவருக்கான பெருமைமிகு தகுதி" என பதிவிட்டுள்ளார்.
அமர்பிரசாத் ரெட்டி தனது இன்னொரு பதிவில், "கோடநாடு கொலை, -கொள்ளை போன்ற சர்ச்சையில் சிக்கியிருப்பதுதான், ஒரு கட்சித் தலைவருக்கான தகுதி என அதிமுக ஜெயக்குமார் நினைத்தால், அப்படிப்பட்டத் தகுதி எங்கள் தலைவருக்கு இல்லை தான்" என்று தெரிவித்துள்ளார். பதிலுக்கு அதிமுகவினரும் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்,
இதனிடையே தமிழ்நாட்டில் இப்படி ஒரு பிரச்சனை போய் கொண்டிருக்கும் போது, பிரதமர் மோடியை அதிமுக எம்பி தம்பித்துரை வெகுவாக புகழ்ந்து பேசி உள்ளார். எனவே இதை பார்க்கும் போது, அதிமுக பாஜக மீண்டும் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளது என்றும், டெல்லி தலைமை விரைவில் எடப்பாடி பழனிசாமியை அழைத்து பேசும் என்றும் கூறுகிறார்கள் மூத்த பத்திரிக்கையாளர்கள்.












Click it and Unblock the Notifications