ஆரம்பமே அசத்தல்.. எடப்பாடி போட்ட ஆர்டர்.. திண்டிவனம் திமுகவை திணறடிக்கும் சி.வி.சண்முகம்.. போராட்டம்
சிவி சண்முகம் தலைமையில் திமுக அரசை கண்டித்து அதிமுக உண்ணாவிரத போராட்டம்
சென்னை: திமுக அரசை கண்டித்து, அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில், இந்த போராட்டம் தொடங்கி உள்ளது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி திண்டிவனத்தில் உண்ணாவிரதம் நடந்து வருகிறது.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் குறித்து கேள்வி எழுப்பு உள்ளார்.. அத்துடன் முக்கிய கோரிக்கையையும் தமிழக அரசுக்கு விடுத்துள்ளார். அதில் உள்ளதாவது:

திண்டிவனம்
"விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க வேண்டி, பல ஆண்டுகால கோரிக்கையை எனது தலைமையிலான ஜெயலலிதா அரசு கனிவுடன் ஆய்வு செய்து, கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், கூனிமேடு கிராமத்தில் இருந்து தினமும் 60 MLD கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைத்து, அதன்மூலம் விழுப்புரம் நகராட்சி, திண்டிவனம் நகராட்சி, விக்கிரவாண்டி பேரூராட்சி, மரக்காணம் பேரூராட்சி மற்றும் மரக்காணம், வானூர், மைலம், விக்கிரவாண்டி, காணை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 692 கிராம குடியிருப்புகளுக்கும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் மற்றும் திண்டிவனம் சிப்காட்டுக்கும், தினந்தோறும் கடல் நீரை குடிநீராக்கி வழங்கும் 1502.72 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டப்பட்டு, ஆரம்ப கட்டப் பணிகள் துவக்கப்பட்டன.

கள்ளக்குறிச்சி
ஆனால், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்த செயல்படாத திமுக அரசு, மக்களின் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்ற அக்கறை சிறிதளவும் இல்லாமல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசால் தொடங்கப்பட்ட திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இத்திட்டத்தை தற்பொழுது கைவிட்டுள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய விவசாயிகள் நிறைந்த மாவட்டங்களாகும்.

விழுப்புரம்
ஏற்கெனவே, இந்த மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட அம்மா பல்கலைக்கழத்தை மூடியதன் மூலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்பை திமுக அரசு பறித்தது. இப்பொழுது, இந்த செயல்படாத, நிர்வாகத் திறமையற்ற திமுக அரசு ஏழை, எளிய மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைப்பதையும் பறித்துள்ளது.

சிவி சண்முகம்
ஜெயலலிதா அரசால் அடிக்கல் நாட்டப்பட்ட, கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்திட வேண்டும் என்றும்; இதற்குத் தேவையான நிதியினை உடனடியாக விடுவித்திட வேண்டும் என்றும் வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும், மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், எம்.பி தலைமையில் 27.08.2022 - சனிக்கிழமை காலை 9 மணிமுதல், திண்டிவனம் காந்தி சிலை அருகில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.

திண்டிவனம்
மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதே போல், மகளிர் உள்ளிட்ட பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்றும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர் பாட்டு
அந்தவகையில், இன்று காலை சரியாக 9 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் ஆரம்பமானது.. மாஜி அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில், ஏராளமான அதிமுகவினர் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பலர் திமுக அரசுக்கு எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக கறுப்பு சட்டை அணிந்து, பங்கேற்றுள்ளனர்..
"தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று என்ற எம்ஜிஆர் பாடலுடன் உண்ணாவிரதம் துவங்கி நடந்து வருகிறது.. ஏராளமான பெண்கள் உட்பட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.. கூட்ட நெரிசல் அதிகமாகிவிடவும், அவர்களை அங்கிருந்தோர் ஒழுங்குப்படுத்தி உட்கார வைத்து வருகிறார்கள்.. அதற்குள் சிவி சண்முகம் டென்ஷனாகி, யாரையோ சத்தம் போட்டு, உட்கார வைத்தார்.












Click it and Unblock the Notifications