உள்ளாட்சி தேர்தல்: தி.மு.க.வை வீழ்த்த செம வியூகம் வகுத்த இ.பி.எஸ்.. நாளை முதல் பிரசாரம்!
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி நாளை முதல் பிரசாரம் செய்கிறார்.
தமிழ்நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போது செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு இருந்ததால் வார்டு மறுவரையறை காரணமாக இந்த மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.
இந்த மாவட்டங்களில் உடனடியாக தேர்தல் நடத்த உத்தரவிடும்படி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த மாவட்டங்களில் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உள்ளாட்சித் தேர்தல்
இதனை தொடர்ந்து 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த 9 மாவட்டங்களில் அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஏற்கனவே தொடங்கி விட்டது. இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது. நாளை வேட்பு மனுக்கள் ஆய்வு செய்யப்படுகிறது.

வாக்குப்பதிவு
அக்டோபர் 12-ம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்றும் மாநிலத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் பணியில் கட்சிகள் ஏற்கனவே தீவிரமாக ஈடுபட்டு வந்தன. இருந்த போதிலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் முதன்முதலாக சுறுசுறுப்பாக களம் இறங்கியது அ.தி.மு.க.தான். உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக முதலில் அந்த கட்சியில் கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

அ.தி.மு.க சுறுசுறுப்பு
செங்கல்பட்டுக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டார். வேலூர் மாவட்டத்துக்கு சேவூர் ராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து கூட்டணியில் இருந்து பாமக வெளியேறிய நிலையில் தேர்தலில் போட்டியிடும் இடங்கள் தொடர்பாக பாஜகவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது அதிமுக.

வேட்பாளர் பட்டியல்
பல இடங்களில் பாஜக-அதிமுக போட்டியிடும் இடங்கள் முடிவு செய்யப்பட்டன. சில இடங்களில் இழுபறி நீடித்து வருகிறது. இதனை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின்
பட்டியலையும் அதிமுக வெளியிட்டது. ஆளும் கட்சியான திமுகவில் போட்டியிடும் இடங்கள் குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் அதிமுக முந்திக் கொண்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டது.

எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி நாளை முதல் பிரசாரம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களிலும், நாளை மறுதினம் நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொள்கிறார். இதேபோல் தேர்தல் நடக்கும் மற்ற மாவட்டங்களிலும் அவர் பிரசாரம் செய்கிறார்.

வியூகம் எடுபடுமா?
தமிழக்தில் தொடந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்து விட்ட அ.தி.மு.க இந்த 9 மாவட்டங்களில் வெற்றி வாகை சூட முதலில் இருந்தே தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் ஆணையம் அறிவித்த ஒரு மணி நேரத்தில் அ.தி.மு.க கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்துள்ள அதிமுக, தற்போது பிரசாரம் வரை வந்து விட்டது. தி.மு.க.வுக்கு முன்பே பிரசாரம் மேற்கொண்டு வெற்றிகனியை பறிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வியூகம் அமைத்துள்ளார். அவரது வியூகம் எடுபடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications