"பாஜக உடன் கூட்டணியில் இருந்தாலும்.. கொள்கையில் பல முரண்பாடுகள் உள்ளன!" பளீச் என சொன்ன கடம்பூர் ராஜு
சென்னை: அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில் இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள கிருஷ்ணா நகர் மற்றும் மன்னார்சாமி நகர்ப் பகுதியில் தெருவில் சட்டமன்றம் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 36.74 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை மற்றும் வாறுகால் அமைத்தல் பணிகள் தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டார்.

கடம்பூர் ராஜு
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, "அதிமுகவினரை விமர்சிப்பதினாலேயே திமுகவின் செய்தி பத்திரிக்கைகளும் ஊடகங்களில் வெளிவருகிறது. தமிழகத்தில் எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. நாளும் பொழுதும் அரசியல் களத்தில் செயல்பட்டு வரும் அதிமுகவினரை அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்து வருகிறார். அதிமுகவினரைப் பார்த்து திமுக பயந்து கொள்கிறது

முரண்பாடு உள்ளது
பாஜகவுடன் அதிமுக இணைந்திருந்தாலும் கொள்கை ரீதியாக பல்வேறு முரண்பாடுகள் உள்ளது. எங்களுக்கு மட்டுமல்ல.. தமிழக மக்களுக்கும் முரண்பாடான கொள்கைகளை பாஜக கொண்டுள்ளது என்று அனுபவத்தின் வாயிலாக பொன்னையன் தெரிவித்துள்ளாரே தவிர அதிமுகவிற்கும் பாஜகவும் எதிரான கருத்தை அவர் தெரிவிக்கவில்லை.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை
தமிழகத்தில் நிலவிவரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை முதல்வரின் கவனத்திற்குச் செல்கிறது என்பதே எங்களுக்குத் தெரியவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து முதல்வர் தெரிந்துகொண்டு சொல்கிறாரா? இல்லையென்றால் அரசியலுக்காக அமைதிப் பூங்கா நிலவுகிறது என்று கூறுகிறாரா எனத் தெரியவில்லை. பெரும் ஆபத்தை விளைவிக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை முதல்வர் கவனத்திற்குச் செல்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

குடும்ப கட்சி திமுக
அதிமுகவில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் என்றுமே அதிகாரம் உண்டு. இது ஜனநாயக கட்சி! திமுகவைப் போன்று குடும்ப கட்சி அல்ல.. ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் தான் என்பதை இப்பொழுதே முன்னிலைப்படுத்தி வருகின்றனர். அதிமுகவில் குடும்ப அரசியலுக்கு இடமில்லை அடிமட்டத்திலிருந்து வந்த தொண்டர்கள் இருவர் முதல்வரானது வரலாற்றிலேயே அதிமுகவில் நடந்துள்ளது" என்றார்.

பாஜகவில் சசிகலா
இதனிடையே சசிகலாவை பாஜகவில் இணைய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியது தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த கடம்பூர் ராஜு, சசிகலாவை பாஜகவில் இணைய அழைப்பு விடுத்தது முன்னாள் பாஜக மாநில தலைவர். எனவே இக்கேள்வியை அவர்களும் தான் கேட்க வேண்டும். இது அவர்கள் இருவருக்கும் உண்டான பிரச்சினை" என்று பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications