சொத்துக்குவிப்பு வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி கோரிக்கையை ஏற்ற சுப்ரீம் கோர்ட்.. உத்தரவு!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2001-2006 காலகட்ட அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் பா.வளர்மதி. அமைச்சராக இருந்தபோது வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து பா.வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2012ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் பா.வளர்மதியின் வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தார். பின்னர், இந்த வழக்கு குறித்து முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கில் டிசம்பர் 4ஆம் தேதி வாதங்களைத் தொடங்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தரப்பு வழக்கறிஞர்களுக்கு கடந்த நவம்பர் 6-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணைக்கு தடைகோரி முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி அனிருதா போஸ் தலைமையிலான அமர்வு கடந்த டிசம்பர் 1ஆம் தேதி விசாரணை நடத்தியது. அப்போது பா.வளர்மதியின் தரப்பு வாதங்களை ஏற்ற உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அரசு லஞ்ச ஒழிப்புத்துறை 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தது.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தனது மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க முன்னாள் அமைச்சர் வளர்மதி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் ஜனவரி இறுதி வாரத்தில் வழக்கை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications