மீண்டும் ஆலோசனை.. ஓபிஎஸ், இபிஎஸ் இருவருமே சேர்ந்து.. “ஒற்றைத் தலைமை வரவே வராது” வைத்திலிங்கம் உறுதி!
சென்னை : பொதுக்குழு தீர்மானம் பற்றி நடைபெறவிருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருமே பங்கேற்க வாய்ப்பிருக்கிறது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் தனித்தனியாக தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாக பத்திரிகையாளர்களைச் சந்தித்து தனது நிலைப்பாடு குறித்து தெரிவித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி இதுவரை எந்தவித பதிலும் கூறவில்லை.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் சந்தித்த தம்பிதுரை, சென்னை பசுமை வழிச் சாலையிலுள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை இன்று சந்தித்துப் பேசினார். எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துகளை அவர் ஓ.பி.எஸ்ஸிடம் கூறியதாக தெரிகிறது. அதற்கு ஓ.பன்னீர்செல்வமும் தனது கருத்துகளை அவரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று இரவும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். பின்னர் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், "கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும், இரட்டைத் தலைமையின் கீழ் சிறப்பாக கட்சி வளர்ச்சிக்குப் பாடு பட வேண்டும். மீண்டும் ஜெயலலிதாவின் எண்ணப்படி ஆட்சிக்கு வர வேண்டும். ஒற்றுமையாக இருப்பதைப் பற்றி ஆலோசனை நடைபெற்றது.
கட்சி அலுவலகத்தில் பொதுக்குழு தீர்மானம் பற்றி முடிவெடுக்க நடைபெறவிருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருமே பங்கேற்க வாய்ப்பிருக்கிறது. அதிமுகவில் இரட்டைத் தலைமைதான். ஒற்றைத் தலைமைக்கு கட்சி சட்டத்திலும் இடமில்லை, அதைக் கொண்டு வரவும் முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications