ஜாக்டோ ஜியோ போராட்டம்... பல லட்சம் வாக்குகளை இழக்கப்போகும் அபாயத்தில் அதிமுக
Recommended Video

சென்னை: ஜாக்டோ ஜியோ போராட்ட குழுவினரின் போராட்டம் அதி தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் அரசு இன்றைக்குள் பணிக்கு திரும்பாதவர்களை வீட்டுக்கு அனுப்பப் போவதாக அறிவித்துள்ளது. இந்த நிலை நிச்சயமாக அதிமுகவுக்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளது.
கடந்த 2003- ம் ஆண்டு இது போன்று அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பல கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது. இறுதியில் ஜெயலலிதா போராட்டக்காரர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.

விளைவு காவல்துறை 30.06.2003 அன்றும் 01.07.2003 அன்றும் நள்ளிரவில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் வீடுகளில் புகுந்தது. பேருந்துகளை மறித்தல், எரிக்க முயற்சித்தல், பெண் அலுவலர்களின் மீது அத்து மீறி நடத்தல் பணிக்கு செல்பவர்களை தடுத்தல், அரசு உடமைகளை சேதப்படுத்துதல், தகாத வார்த்தைகளால் வசைபாடுதல், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் என எண்ணற்ற குற்றசாட்டுகள் கூறப்பட்டது இவ்வாறு கைது செய்யப்பட ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேரை பணியிலிருந்தும் நீக்கம் செய்தார் ஜெயலலிதா.
இதனால் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் என அவர்களின் ஒட்டு மொத்த குடும்பங்களும் நண்பர்களும், உற்றார் உறவினர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு தமிழகத்தில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டனர். சிறைகள் நிரம்பி வழிந்தன. இவ்வாறு சிறைகளில் அடைக்கப்பட்டோருக்கும் உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை, கழிவறை வசதிகளோ, குடிநீர் வசதிகளோ முறையாக செய்து கொடுக்கப்படவில்லை என்ற குற்றசாற்றுகளும் எழுந்தது.
போராடியவர்கள் அத்தனை பெரும் 03.7.2003 வரை எஸ்மா சட்டத்தின் கீழ்தான் கைது செய்யப்பட்டார்கள். பின்னர் அரசு அந்த சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து அதை டெஸ்மா என மாற்றியது. இப்படி போராடியவர்களில் 88 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் விளைவு அடுத்த ஆண்டு நடைபெற்ற அதாவது 2004 –ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படு தோல்வியை சந்தித்தது. திமுக காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் வென்றது.

இது கடந்த கால வரலாறு என்றால் தற்போதும் அந்த நிலை வருமோ என எண்ணத்தோன்றும் அளவில்தான் தற்போதும் போராட்டங்களின் வடிவம் சென்று கொண்டிருக்கிறது.
ஆசிரியர்கள் தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த கூறுகிறார்கள். இது ஆசிரியர்களுக்கு மட்டும் பொருந்துகின்ற சட்டம் அல்ல IAS, IPS முதல் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இது பொருந்தும். இவர்களுக்கான இந்த கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுப்பதாக கடந்த முறை விதி எண் 110 ன் கீழும், தேர்தல் வாக்குறுதிகளின்போதும் ஜெயலலிதா கூறியிருந்தார். அதைத்தான் நிறைவேற்ற இவர்கள் இப்போது போராடுகிறார்கள். இவர்கள் இப்போது போராடுவார்கள் என்பது அரசுக்கும் தெரியும். அதற்கு முன்பே உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இந்தப் போராட்டம் இவ்வளவு தீவிரம் அடைந்திருக்காது. அதோடு இப்போதும் துறை சார்ந்த அமைச்சர்கள் போராட்டக் காரர்களுடன் பேசுகிறார்களே தவிர முதலமைச்சர் இன்னமும் போராடுபவர்களை சந்திக்கவில்லை.
போர்க்களத்தில் கூட இக்கட்டான நிலையில் படைத்தலைவன் தான் உடனடியாக செயலாற்றுவான். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் முதலைமைச்சர் ஈகோ பார்க்காமல் போராடுபவர்களை அழைத்துப் பேசவேண்டும் என்று கூறுகிறார். செய்வாரா முதலமைச்சர் அல்லது அம்மா வழியில் நடக்கும் அரசு மீண்டும் 2003 ஐ நினைவுப் படுத்தும் வகையில் எஸ்மா, டெஸ்மா சட்டங்களை கொண்டு வருமா என்பது காலத்தின் கையில் . ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிகிறது... பல லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் உற்றார் உறவினர் என மிகப் பெரிய வாக்கு வங்கியை அதிமுக பொறி கொடுக்கப் போகிறது.












Click it and Unblock the Notifications