சட்டப்பேரவையில் அதிமுக கப்சிப்! ராஜேந்திரபாலாஜி பற்றி மறந்தும் வாய்திறக்காத உறுப்பினர்கள்!
சென்னை: சட்டமன்றத்தில் ஆளுநர் உரையை புறக்கணித்து நேற்று வெளிநடப்பு செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள், இன்று கப்சிப் என எந்த சலசலப்புமின்றி அமைதியாக பேரவை நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
அதுமட்டுமல்லாமல் நேற்று சினிமா பாணியில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விவகாரம் தொடர்பாக மறந்தும் அதிமுக உறுப்பினர்கள் வாய் திறக்கவில்லை.
பொதுவாக சட்டமன்ற நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இது போன்ற கைது நிகழ்வுகள் நடைபெற்றால், அது குறித்து சம்பந்தப்பட்ட கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் அமளியிலோ அல்லது அரசு மீது குற்றஞ்சாட்டவோ செய்வார்கள்.

சட்டப்பேரவை
2022-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதை புறக்கணித்து வெளிநடப்பு செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று இருக்கும் இடம் தெரியாமல் சட்டப்பேரவையில் கப்சிப் என அமர்ந்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் ஓ.பன்னீர்செல்வம், பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ்பாண்டியன், கடம்பூர் ராஜூ, ராஜன் செல்லப்பா உள்ளிட்ட பலர் அரசிடம் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை மட்டும் எடுத்துரைத்தனர்.

அதிமுக கப்சிப்
இதனிடையே நேற்று கர்நாடகாவில் நடுரோட்டில் மடக்கிப்பிடித்து கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பற்றி அதிமுக உறுப்பினர்கள் வாய்திறக்கவில்லை. பொதுவாக இது போன்ற நிகழ்வுகளின் போது சம்பந்தப்பட்ட கட்சி சட்டப்பேரவியில் சலசலப்பை ஏற்படுத்தும். ஆனால் ராஜேந்திரபாலாஜி விவகாரத்தில் அதிமுக உறுப்பினர்கள் கப்சிப் என இருந்ததை பார்க்கும் போது, நமக்கேன் வம்பு என பலரும் ஒதுங்கிக்கொண்டது போல் தெரிகிறது.

பொள்ளாச்சி ஜெயராமன்
கோவையிலிருந்து பொள்ளாச்சியை பிரித்து மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, கிணத்துக்கடவு உள்ளிட்ட வட்டங்களை இணைத்து பொள்ளாச்சியை தனி மாவட்டமாக்க வேண்டும் என பொள்ளாச்சி ஜெயராமன் அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில அளித்துப் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கடந்த 10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியில் முக்கியப் பதவியில் இருந்த ஜெயராமன் திமுக அரசு மீது நம்பிக்கை கொண்டு கோரிக்கை வைத்ததற்கு நன்றி எனக் கூறினார்.
Recommended Video

அனைவரும் சிரிப்பு
மேலும், இது தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை செய்து உரிய தகவலை வெளியிடுவார் என அமைச்சர் பதிலளித்தார். அமைச்சரின் இந்த பதிலை கேட்டு, திமுக எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் மட்டுமின்றி அதிமுக உறுப்பினர்கள் சிலரும் சிரித்தனர். பொள்ளாச்சி ஜெயராமன் கடந்த அதிமுக ஆட்சியில் பவர்ஃபுல் மனிதராக வலம் வந்தவர் என்பதும் இவர் நினைத்திருந்தால் பொள்ளாச்சியை தனி மாவட்டமாக்க எப்போதே நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications