அதிமுகவிலிருந்து பாஜகவிற்கு விழுந்த குட்டு! "காங்கிரசே பரவாயில்லை, இவர்கள் கொடுமை"- பொன்னையன் அதிரடி
சென்னை: காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் அதிக கொடுமைகள் நடப்பதாகவும், தமிழ்நாட்டை பாஜக வஞ்சிப்பதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்து உள்ளார்.
அதிமுக மூத்த தலைவர் பொன்னையன், ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் கட்சி விவகாரங்கள் தொடர்பாக பல்வேறு விபரங்களை பகிர்ந்து இருக்கிறார். "பாஜகவுடன் கூட்டணியில் இருக்க வேண்டியதற்கு என்ன காரணம் என்றால் இன்று ஜிஎஸ்டி வந்துவிட்டது.
ஒன்றரை லட்சம் கோடியை ஜிஎஸ்டியாக மத்திய அரசுக்கு நாம் கொடுத்தால் அதில் 50% அதாவது ரூ.60,000 கோடி வர வேண்டும். ஆனால், ரூ.5,000 கோடி, ரூ.10,000 கோடி, ரூ.15,000 கோடியை தருகிறார்கள். அதையும் காலதாமதாக கொடுக்கிறார்கள்.

இந்தி பேசும் மாநிலங்கள்
தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது. ஏற்றுமதிகளின் மூலமாக ரூ.2 லட்சம் கோடி வரை அந்நிய செலாவணி கிடைக்கும். ஆரம்ப காலத்திலிருந்து வரையறுக்கப்பட்ட விதிகளின்படி அந்நிய செலாவணியில் 50% மாநில அரசுகளுக்கு தர வேண்டும். ஆனால் தருவதில்லை. மிகவும் பின் தங்கிய மாநிலம் என்று பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற இந்தி பேசும் 7 மாநிலங்களை அறிவிக்கிறார்கள்.

குறைவான நிதி
ஆனால், வற்றாத ஜீவநதி கங்கை, வற்றாத ஜீவநதி பிரம்மபுத்திராவின் ஒரு பகுதி, காவிரியைபோல் 30 மடங்கு தண்ணீர் ஓடும் மகாநதி போன்றவை அமைந்துள்ள பிரதான பொருளாதார பகுதிகளை, விவசாயத்தில் முன்னேறிய பகுதிகளை மிகவும் பின் தங்கியவை என்று கூறி நிதிகளை அதிகம் கொடுக்கிறார்கள். நமக்கு குறைவாக தருகிறார்கள்.

பாஜக ஆட்சியில் கொடுமை
நாம் உழைத்து, நாம் வியர்வை சிந்தி, நாம் சம்பாதித்து கொடுக்கும் அந்நிய செலாவணியை அவர்களுக்கு கொடுத்து நம் வயிற்றில் அடிக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் அதிக கொடுமைகள் நடக்கின்றன. பாஜக சுயநலத்தோடு இதை செய்வதை வண்மையாக கண்டிக்கிறோம்.

தமிழ்நாட்டின் நலன்
மனம் மாறுவார்கள். நீங்கள் தமிழ்நாட்டில் வேர் ஊன்ற வேண்டும் என்றால் முல்லை பெரியார் உயரத்தை, காவிரிக்கு 275 டிஎம்சியை, பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் பிரச்சனை, இரு மொழிக்கொள்கை பிரச்சனை, தமிழ்நாட்டுக்கு உரிய நிதி ஒதுக்குவது போன்றவற்றை மாற்றி தமிழ் மக்களுக்காகவும் தமிழ்மக்களின் பிரதிநிதியாக செயல்பட்டால்தான் பாஜகவுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

உபியாக மாற்றுவோம்
இதை நேரடியாக அந்த தலைவரிடம் நானே சொல்லி இருக்கிறேன். மக்களை மதிக்க மாட்டோம். தமிழ்நாட்டை உத்தரப்பிரதேசமாக மாற்றுவோம், தமிழ்நாட்டை மத்திய பிரதேசமாக மாற்றுவோம். என்று அவர்கள் செயல்படும்போது அவர்களால் வளர்ச்சியடைய முடியாது. அது அவர்களின் கொள்கை. எங்கள் கொள்கையை நாங்கள் சொல்கிறோம்." என்றார்.












Click it and Unblock the Notifications