தலைமை வகிக்கும் ஜெயக்குமார்.. போக்குவரத்து துறை தனியார்மயம்? இன்று சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: போக்குவரத்து துறையை தனியார் மயமாக்கும் உள்நோக்கத்தோடு டெண்டர் முறையில் ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு கைவிட வலியுறுத்தி இன்று அதிமுக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கடந்த 5 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், "போக்குவரத்துத் தொழிலாளர்களின் 15-ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை துவக்கிடவும்; போக்குவரத்துத் துறையை தனியார் மயமாக்கும் உள்நோக்கத்தோடு டெண்டர் முறையில் ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் நடவடிக்கையைக் கைவிடவும்; 100 நாட்களுக்குள் வழங்குவதாக உறுதியளித்த பழைய ஓய்வூதியம்; ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி மற்றும் பணப் பயன்களை உடனடியாக வழங்கிடவும் விடியா திமுக அரசை வலியுறுத்தி, கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் : 9.10.2023 - திங்கட் கிழமை

'உழைப்பவரே உயர்ந்தவர்', 'உழைப்பே உயர்வு தரும்' என்ற பொன்மொழிகளை தாரக மந்திரமாகக் கொண்டு உழைத்து வரும் தொழிலாளர்கள், அனைத்து நிலைகளிலும் இன்புற்று வாழ்ந்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு, கழக ஆட்சிக் காலங்களில் தொழிலாளர்கள் நலன் கருதி பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தியும், எண்ணற்ற உதவிகளை செய்தும், தொழிலாளர்களுடைய நலன்கள் பேணி பாதுகாக்கப்பட்டு வந்தது.
விடியா திமுக அரசு பதவியேற்று 29 மாதங்கள் முடிவடைய உள்ள நிலையில், தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு சிறிதும் அக்கறை காட்டாமல் தொழிலாளர் விரோத அரசாக விளங்கி வருகிறது. குறிப்பாக, போக்குவரத்துத் துறையில் எங்கெங்கெல்லாம் தனிப்பட்ட முறையில் பலன்பெற முடியும் என்பதை ஆராய்ந்து, அதற்கேற்ற வகையில் இந்த விடியா அரசு செயல்பட்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.
இந்நிலையில்,போக்குவரத்துத் தொழிலாளர்களின் 15-ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாகத் துவக்கிடவும்;
போக்குவரத்துத் துறையை தனியார் மயமாக்கும் உள்நோக்கத்தோடு டெண்டர் முறையில் ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் நடவடிக்கையை உடனடியாகக் கைவிடவும்;
100 நாட்களுக்குள் வழங்குவதாக உறுதியளித்த பழைய ஓய்வூதியம்;
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி (DA) மற்றும் பணப் பயன்களை உடனடியாக வழங்கிடவும்,
விடியா திமுக அரசை வலியுறுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில், 9.10.2023 திங்கட் கிழமை - பிற்பகல் 3 மணியளவில், சென்னை, பல்லவன் அலுவலகம் முன்பு, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. D. ஜெயக்குமார் அவர்கள் தலைமையிலும்; கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் திரு. ஆர். கமலக்கண்ணன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக அனைத்து மண்டலங்களிலும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொழிலாளர்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும்.
விடியா திமுக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கைப் கண்டித்தும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வலியுறுத்தியும் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொழிலாளர்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications