பார்த்தாலே வாந்தி வருது.. எல்லாரும் என்ன பேசிக்கிறாங்க தெரியுமா.. திமுக மீது பாய்ந்த மாஜி உதயகுமார்
திமுக அரசை விமர்சித்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி தந்துள்ளார்
சென்னை: "பார்த்தாலே வாந்தி வருகிறது.. மக்கள் என்ன பேசிக்கிறார்கள் தெரியுமா?" என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, அந்த அரசை விடாமல் விமர்சித்து கொண்டிருப்பவர்களில் முதன்மையானவர் எடப்பாடி பழனிசாமி.
அதற்கு பிறகு குறிப்பிடத்தக்கவர்கள் மாஜி அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார் போன்றோர் ஆவர்.

சவால்
4 நாட்களுக்கு முன்புகூட திமுகவுக்கு சவால் விடுத்திருந்தார் உதயகுமார்.. "திமுகவுக்கு சுத்தமா நிர்வாகத்திறன் கிடையாது.. மழை வெள்ளமானாலும் சரி, மண்டை வெல்லமானாலும் சரி, தமிழக அரசின் செயல்பாடு மோசமாகவே உள்ளது.. திமுக ஆட்சி காலத்தில் பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக வெளியிடப்பட்ட மத்திய தணிக்கை அறிக்கை பற்றி விவாதம் நடத்த திமுக தயாரா? என்று கேட்டிருந்தார்.

மாஜி அமைச்சர்
இன்று மறுபடியும் ஒரு பேட்டி தந்து திமுக தொண்டர்களை உசுப்பேற்றி உள்ளார் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார். மதுரை மாவட்டம் புறநகர் மேற்கு ஒன்றிய பகுதிகளான சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சி பகுதிகளில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் சந்தித்து வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டத்தை சோழவந்தான் பகுதியில் நடத்தினார்..

திமுக அரசு
இதில் 4 பேரூராட்சி பகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அதிமுக வெற்றிபெற பாடுபட வேண்டும் என்றார். இதையடுத்து, ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, "வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றுவிடும்.. ஏனென்றால் பொய்யான வாக்குறுதிகளை பொதுமக்களிடத்தில் கூறி திமுக அரசு ஆட்சிக்கு வந்தது.. மக்கள் திமுக மீது பயங்கரமான கோபத்தில் உள்ளனர்.. பொதுமக்கள் என்ன பேசுகிறார்கள் தெரியுமா? ரூ.500க்கு ஆசைப்பட்டு ரூ.5000 இழந்துவிட்டோம் என்கிறார்கள்...

பொங்கல் பரிசு
அதிமுக ஆட்சியே நீடித்திருந்தால், இந்த வருடம் பொங்கல் பரிசுடன் ரூ.5000 பணத்தை அதிமுக அரசு வீடுவீடாக வந்து வழங்கியிருக்கும்.. ஆனால், திமுகவினர் வழங்கிய ரூ.500க்கு ஆசைப்பட்டு பொங்கல் பரிசு பணத்தை இழந்துவிட்டோம்.. குடும்ப தலைவிகளுக்கு 1000 வழங்குவோம் என்று சொன்னார்கள்.. அதையும் வழங்கவில்லை.. இப்படியெல்லாம் திமுக அரசு மீது பொதுமக்கள் கோபத்தில் உள்ளனர்

பொங்கல் தொகுப்பு
அதனால், அதிமுகவினர் எளிதில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறலாம்.. இப்போ திமுக அரசு தந்திருக்கிற பொங்கல் பரிசு தொகுப்பு உகந்ததாக இல்லை.. 21 வகையான பொங்கல் பரிசு தொகுப்பை பார்த்தாலே வாந்தி வரும் அளவிற்கு அதன் தரம் அமைந்துள்ளது.. அதனால், பொதுமக்களிடத்தில் அதிமுக சாதனைகளை விளக்கி கூறி உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் வெற்றிபெற வேண்டும்" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுக் கொண்டார்...

விமர்சனம்
இப்படி பொங்கல் தொகுப்பு குறித்து புகார்கள் வரவும்தான், அதுகுறித்து விசாரணை நடத்தி, மெத்தனமாக செயல்பட்ட, சம்பந்தப்பட்ட அதிகாரியை டிஸ்மிஸ் செய்தார் முதல்வர் ஸ்டாலின்.. மேலும் நல்ல தரத்துடன் பொருட்களை விநியோகிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.. அப்படி இருந்தும், அதிமுக விடாமல் அந்த பழைய குற்றச்சாட்டையே சொல்லி கொண்டே இருக்கிறதே என்று திமுக தரப்பினர் கொந்தளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications